“திமுக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போடும் தப்புக் கணக்கு” – ஸ்டாலின் காட்டம்!

Published On:

| By Selvam

திமுக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போடும் அரசியல் கணக்கெல்லாம் தப்புக் கணக்காகத்தான் ஆகும் என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று (டிசம்பர் 22) தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியபோது,

சட்டமன்றத் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள்!

பல நேரங்களில் பல கூட்டங்களில் உங்களை நான் சந்தித்திருந்தாலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் உங்களில் ஒருவனான என்னுடைய கட்டளையை ஏற்று நாற்பதுக்கு நாற்பதிலும் வெற்றியைப் பெற்றுத் தந்த தொண்டர்களான உங்களை இந்த செயற்குழுக் கூட்டத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இங்கு பல பேர் பல கருத்துகளைப் பேசியிருக்கிறீர்கள். இப்படி நம்முடைய கருத்துகளைப் பகிர்ந்து, ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றங்களால் திமுகவின் அடுத்தடுத்த நகர்வுகளைத் தீர்மானிக்கும் முடிவுகளை எடுக்கும் கூட்டங்கள்தான், செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள்.

திமுகவுக்கு நன்மை பயக்கும், வெற்றிகளை விளைவிக்கும் கருத்துகளை அனைவரும் உங்கள் உள்ளங்களில் ஏற்றிச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சட்டமன்றத் தேர்தல் களத்தை நாம் எதிர்கொள்ள இன்னும் ஒன்றரை ஆண்டுகள்தான் இருக்கிறது. ஏழாவது முறை ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய இலக்கு.

எப்போதும் உறுதியாக இருக்கும் திமுக

சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் நம் கூட்டணி வெல்லும். 2026-இல் வெற்றி நமதுதான். என்னுடைய இந்த நம்பிக்கைக்கு ஆணிவேர் நீங்கள்தான். களத்தில் நாம் கொடுக்கப் போகும் உழைப்புதான், நம்முடைய வெற்றியை உறுதி செய்யப் போகிறது.

“கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை” என்று ஆணவத்தில் பேசுகிறவன் இல்லை நான். எத்தனை படைகள் வந்தாலும், அவர்கள் எத்தனை எத்தனை பெரிய திட்டங்களோடு வந்தாலும், அவர்களின் வியூகங்களை முறியடிக்கும் கலைஞரின் படை என்னிடம் இருக்கிறது என்ற நெஞ்சுரத்தில் நான் நம்பிக்கையோடு பேசுகிறேன்.

உங்களின் உழைப்பை ஐம்பது ஆண்டுகளாகக் உடனிருந்து பார்ப்பவன் நான். தேர்தல் என்று வந்துவிட்டால், இரவு பகல் பார்க்காமல் வேலை செய்பவன்தான் கருப்பு – சிவப்பு தொண்டன்.

அசுர உழைப்பைக் கொடுத்து, வெற்றியை எட்டிப் பறிக்கிறவன்தான் திமுககாரன். கொள்கைப் பிடிப்பிலும் சரி கொள்கையை வென்றெடுக்க உழைப்பை கொடுப்பதிலும் சரி நமக்கு நிகர் யாரும் இல்லை.

1957-இல் இருந்து 2024 வரை தேர்தல் களத்தில் நாம் எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை. இமயமலை போன்ற தலைவர்களில் இருந்து எத்தனையோ பேர் நம்மை எதிர்த்திருக்கிறார்கள். எதிரில் நின்றவர்கள் எல்லாம் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த இயக்கம் மட்டும் எப்போதும் உறுதியாக இருக்கிறது.

ஏன் என்றால், இது எப்போதும் மக்களோடு இருக்கிறது. வெற்றி கிடைத்துவிட்டால் மமதையில் ஆடவும் மாட்டோம், தோல்வி அடைத்துவிட்டால் துவண்டு உட்கார்ந்துவிடவும் மாட்டோம்.

வீட்டுக்குள்ளேயே முடங்கி உட்கார்ந்துவிட்டோமா?

நம்முடைய பெரிய பலமே, நம்முடைய கட்சி அமைப்பு முறைதான். அண்ணா உருவாக்கி கலைஞர் கட்டிக்காத்த அமைப்பு முறை நம்முடையது. அதனால்தான், கலைஞர் உறுதியாகச் சொன்னார், “இந்தக் கருணாநிதியின் கதை முடிந்தாலும் திமுகவின் கதை முடியாது. அந்தளவுக்குத் திமுகவின் உட்கட்டமைப்பு மிக வலிமையானது” என்று சொன்னார்.

அதனால்தான் எத்தனையோ முறை நம்முடைய இனப் பகைவர்கள் “ஒழிந்தது திமுக” என்று குதூகலமாக எழுதியபோதும், அப்படி சொன்னவர்கள்தான் கால வெள்ளத்தில் காணாமல் போயிருக்கிறார்களே தவிர, திமுக அழியவில்லை. இன்றைக்கு வரை தமிழ்நாட்டின் முதன்மையான இயக்கமாக இந்தியாவிலேயே 75 ஆண்டுகளைக் கண்ட ஒரே மாநில அரசியல் கட்சியாக அதே வலிமையோடு, வீரியத்தோடு இருக்கிறோம்.

இப்போது நாம் அமைத்திருக்கும் “திராவிட மாடல்” ஆட்சியும், எளிதாக அமைந்துவிடவில்லை. நடுவில் பத்தாண்டுகள் நம்முடைய போராட்டம் எப்படிப்பட்டதாக இருந்தது?

ஒருமுறை எதிர்க்கட்சியாக கூட வரவில்லை. சோர்ந்துவிட்டோமா நாம்? வீட்டுக்குள்ளேயே முடங்கி உட்கார்ந்துவிட்டோமா? இல்லையே. ஒவ்வொரு நாளும் மக்களுடனே இருந்தோம். மக்களுக்காகக் குரல் கொடுத்தோம். வீதி வீதியாக வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்தோம்.

வீதிக்கு வந்து மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடினோம். புயல் – வெள்ளம் என்று எந்தப் பாதிப்பு வந்தாலும், முதல் ஆளாக ஓடிச்சென்று மக்களுக்கு உதவினோம். இன்னும் பெருமிதத்தோடு சொல்ல வேண்டும் என்றால், கொரோனாவில் உலகமே முடங்கியபோது, வல்லரசு நாடுகளே முடங்கிக் கிடந்தபோது, லாக்டவுன் நேரத்திலும் மக்களின் தேவைகளைக் கேட்டு அறிந்து அவர்கள் வீடு தேடிச் சென்று உதவி செய்த ஒரே இயக்கம் திமுகதான்.

அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி!

அதைச் சாதித்துக் காட்டியது நீங்கள்தான். நாம் ஒவ்வொரு வீடாகத் தேடிச் சென்று கொரோனா நேரத்திலும் நிவாரண உதவிகள் செய்தோம். பதவிக்காகக் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல், கடுமையான உழைப்பால் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கிறோம்.

நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்ததில் இருந்து, நாள்தோறும் மக்கள் நலத் திட்டங்களைப் பார்த்துப் பார்த்துச் செயல்படுத்தி வருகிறோம்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48, தோழி விடுதி என்று ஒரு நாள் முழுவதும் பட்டியல் போடும் அளவிலான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம்.

அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி பெற வேண்டும் என்று தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு வசதிகள் என்று ஓய்வில்லாமல் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். நான் சவால்விட்டுச் சொல்கிறேன்… இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் இவ்வளவு திட்டங்களை, இந்தளவிற்குச் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறதா? நிச்சயம் கிடையாது.

ஆளுங்கட்சியாக வந்ததில் இருந்து, கொரோனா, மழை வெள்ளம் என்று எத்தனையோ நெருக்கடிகளை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு மக்களைக் காப்பாற்றி இருக்கிறோம்.

வெற்றிக் கணக்கு நம்முடைய கூட்டணிக்குத் தான்!

ஒரு நாள்கூட ஆளுங்கட்சியாக நாம் ’ரிலாக்சாக’ இருந்ததில்லை. எவ்வளவு நெருக்கடியில் ஆட்சிக்கு வந்தோம். பத்தாண்டு அதிமுக ஆட்சியின் இருட்டில் இருந்து மீட்டெடுப்பதே நமக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். இன்னொரு பக்கம், தமிழ்நாட்டை எப்படியெல்லாம் பின்னுக்குத் தள்ளலாம் என்று யோசித்து அனைத்து வகையிலும் நெருக்கடி தரும் பாஜகவை சமாளிக்கிறோம்.

வெறும் தமிழ்நாட்டோடு நம்முடைய எல்லையைச் சுருக்கிக் கொள்கிற மாநிலக் கட்சி அல்ல திமுக. இந்தியா முழுவதும் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று அந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு அதற்காகவும் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். இப்படி கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஓயாமல் உழைக்கும் நமக்கு உற்சாகத்தைத் தருவது எது? தொடர் வெற்றிகள்தான். அந்த வெற்றிக்கு காரணம், தமிழ்நாட்டு மக்களும், நம் கூட்டணி கட்சித் தோழர்களும்தான்.

2019-இல் கொள்கைக் கூட்டணியாக சேர்ந்தோம். தொடர்ந்து நடந்த சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள் என்று அனைத்திலும் வெற்றிதான்.

இந்த வெற்றிகள் மூலம் என்ன செய்கிறோம்? நாடு – நாட்டு மக்கள் – நாட்டின் பன்முகத்தன்மை – நம் மொழி, பண்பாடு – மதச்சார்பின்மை – இவற்றைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டம் – இதையெல்லாம் காக்கும் ஜனநாயக அரணாகத் தொடர்ந்து செயல்படுகிறோம்.

அதனால்தான் இந்த கொள்கைக் கூட்டணிக்கு எதிராகப் பலரும் அரசியல் கணக்கு போடுகிறார்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன்… நம்முடைய கொள்கைக் கூட்டணிக்கு எதிராக அவர்கள் போடும் கணக்கெல்லாம் தப்புக் கணக்காகத்தான் ஆகும். வெற்றிக் கணக்கு நம்முடைய கூட்டணிக்குத்தான்.

திமுக திட்டங்களை மக்களிடம் சொல்லுங்கள்!

நம்மை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் எல்லாம் வாக்குகளைப் பிரிக்க தனித் தனியாக வந்தாலும் சரி, மொத்தமாகச் சேர்ந்து வந்தாலும் சரி, 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும்.

அதுவும் சாதாரண வெற்றி அல்ல, சரித்திர வெற்றி பெறுவோம். தலைவரே சொல்லிவிட்டார்… வெற்றி சுலபமாக வந்துவிடும் என்று யாரும் மெத்தனமாக இருக்கக் கூடாது.

200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்றால் அது எளிமையாக வராது. அதற்கு, இங்கு இருக்கும் அனைவரும் ஒரு உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும்! “200 தொகுதிகளில், என்னுடைய சட்டமன்றத் தொகுதி முதலாவதாக இருக்க வேண்டும், என் தொகுதிதான் அதிக முன்னிலை பெற்ற தொகுதி என்று வர வேண்டும், என் மாவட்டத்தில், என் மாநகராட்சியில், என் ஒன்றியத்தில், என் பகுதியில், என் பேரூரில், என் ஊராட்சியில், என் வார்டில்தான் அதிக முன்னிலை வாங்கியது” என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

நான் மேடைக்கு மேடை நம்முடைய திட்டங்களைப் புள்ளி விவரங்களோடு சொல்கிறேன்… மக்களுக்குத் தெரியுமே என்று எடுத்துச் சொல்லாமல் நாம் அமைதியாக இருந்துவிடக் கூடாது.

நமக்கு எதிராக நம்முடைய எதிரிகள் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் – பொய்ச் செய்திகள், அவதூறுகள். இதற்கு எதிரான நம்முடைய ஆயுதம் நம்முடைய ஆட்சியின் சாதனைகளும், நம்முடைய கொள்கைகளும்தான். நம்முடைய சாதனைகளைத் தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் தொடுவது போன்று உங்கள் பாணியில் சொல்லுங்கள்.

தொண்டர்களை தயார்படுத்துங்கள்!

களப்பணிக்கு, கட்சிப்பணிக்கு, வெற்றிப்பணிக்குத் தொண்டர்களைத் தயார்படுத்த வேண்டிய பணியை, செயற்குழு உறுப்பினர்களான நீங்கள் இன்றைக்கே தொடங்க வேண்டும். 75 ஆண்டுகள் கடந்துவிட்ட நம் இயக்கத்தை ஏழாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்க வைக்க உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

திமுக மக்களுக்கான இயக்கம். அதிலும் எளிய மக்களின் உரிமைகளுக்காகத் தொடங்கப்பட்ட இயக்கம். கொள்கைப் பிடிப்போடு மக்களுக்காக உழைக்கிறவர்கள்தான் இந்த இயக்கத்துக்கு தேவை. என்னுடைய அறிவுரைகளை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

திரும்பத் திரும்ப நான் இதையெல்லாம் சொல்லக் காரணம்… வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தில் நாம் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம். பொய்ப் பரப்புரைகள், அவதூறுகளைப் புறந்தள்ளி நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நமக்கு வெற்றிய வழங்கியிருக்கிறார்கள்.

அரசியல் சட்டத்தையே மாற்ற வேண்டும் என்று துடித்தவர்களுக்கு இந்தியா கூட்டணி மூலம் ஜனநாயகக் கடிவாளம் போட்டிருக்கிறோம். அதுதான் நம்முடைய இயக்கத்துக்கும் – உங்களுக்கும் – எனக்குமான பெருமை” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”2026 தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் வெற்றி உறுதி” : உதயநிதி நம்பிக்கை!

முதலிடத்தில் இந்தியப்படம் : தனக்கு பிடித்த படங்களின் பட்டியலை வெளியிட்ட ஒபாமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share