நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும் என்ற உறுதியை அனிதா முதல் சமீபத்தில் மறைவெய்திய ஜெகதீசன் வரைக்கும் மாணவச் செல்வங்கள் நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் வீனஸ் எவர்வின் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவ மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “அரசினுடைய பணிகளை, தலைமைச் செயலகத்தில் இருக்கக்கூடிய பணிகளை எல்லாம் முடித்துக்கொண்டு, சற்று ஒய்வு கிடைத்தாலும், அந்த ஒய்வை பயன்படுத்திக்கொண்டு கொளத்தூருக்கு வருவதுதான் என்னுடைய வழக்கமாக வைத்திருக்கிறேன்.
கடந்தவாரம் கொளத்தூருக்கு வந்தபோது, அனிதா அச்சீவர்ஸ் அகாடமிக்கு வந்து உங்களை எல்லாம் சந்திக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், கடுமையான மழை வந்த காரணத்தினால், அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து, ஒத்தி வைக்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி நான் வரமுடியாமல் போய்விட்டது.
ஆனால் அதையும் ஒரு வேளை நல்ல காரியமாக நான் நினைக்கிறேன். அதனால்தான் உடனடியாக இன்னொரு முறையும் இரண்டாவது முறையாக இந்த ஒரு வாரத்திற்குள் கொளத்தூருக்கு வரக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது என்றால், அது உள்ளபடிபே எனக்கு மகிழ்ச்சிதான்.
இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்பட்டதின் நோக்கத்தை எப்போதெல்லாம் உங்களை சந்திக்க வருகிறேனோ, எப்போதெல்லாம் இந்த அகாடமியினுடைய சார்பில் நடக்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளும்பொழுது அப்போதெல்லாம் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் எத்தனையோ முறை அதை சுட்டிக்காட்டி பேசி இருக்கிறேன்.
நம்முடைய கொளத்தூர் தொகுதியில் இருக்கின்ற இளைஞர்களும், மாணவர்களும் தங்களுடைய திறன்களை மேலும் வளப்படுத்திக் கொண்டு, வேலைவாய்ப்பை பெற்றிடவேண்டும் என்கின்ற அந்த நோக்கத்தோடுதான், இந்த அகாடமியை, அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என்கிற பெயரில், நாம் தொடங்கினோம்.
நான் ஒவ்வொரு முறையும் இங்கே வந்து, இந்த நிகழ்ச்சியில் எல்லாம் கலந்து கொண்டு, உங்களை எல்லாம் பார்த்து, இந்த உதவிகளை வழங்குகிறபோது, இங்கே படித்ததால் உங்களுக்குக் கிடைத்திருக்கின்ற வாய்ப்புகளை பற்றி சொல்கிறபோது, மறைந்த நம்முடைய அருமை தங்கை அனிதாவைதான் ஒவ்வொரு முறையும் நான் நினைத்துப் பார்ப்பதுண்டு.
நீட் என்ற கொடுமையான தேர்வுக்கு என்றைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றோமோ, அன்றைக்குதான் நாம் அனிதாவுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தக்கூடிய நாளாக அது அமைந்திடமுடியும்.
நீட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆகவேண்டும் என்ற உறுதியை அனிதா முதல் சமீபத்தில் மறைவெய்திய ஜெகதீஸ்வரன் வரைக்கும் அந்த மாணவச் செல்வங்கள் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.
பட்டப்படிப்புடன் சேர்ந்து தனித்திறமைகள் இருந்தால்தான் வளர முடியும். அந்த வாய்ப்பை நாம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில், அறிவாற்றலில் சிறந்தவர்களாகவும், தனித்திறமை கொண்டவர்களாகவும் வளரவேண்டும். அதற்காகத்தான் “நான் முதல்வன்” என்ற திட்டத்தை தொடங்கி வைத்தேன். இது என்னுடைய கனவுத் திட்டம். ஆண்டுக்கு பத்து லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டோம். ஆனால் கடந்த ஆண்டு 13 லட்சம் மாணவர்கள் இதில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்குத் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் கிடைத்துக் கொண்டு வருகிறது.
அனைத்துத் தரப்பினர் நலனையும், பாதுகாத்து வருகின்ற அரசுதான் நம்முடைய அரசு, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது முதல், சமூக மேம்பாட்டிற்காக சமூக நீதியின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். அந்தத் திட்டங்களுக்கு எல்லாம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு வந்து கொண்டிருக்கிறது.
ஏழை, எளிய குடும்பத் தலைவிகளின் பொருளாதாரத் தற்சார்பை உறுதிப்படுத்தக் கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – இன்னும் மூன்று நாட்களுக்குள் வருகின்ற செப்டம்பர் 15- ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் நான் தொடங்கி வைக்க இருக்கிறேன். இப்படி நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரக்கூடிய திட்டங்களை எல்லாம் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
இந்தத் திட்டங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு அதாவது செலவை எல்லாம் கூட நாங்கள் செலவினங்களாக பார்க்கவில்லை. எதிர்காலத் தலைமுறைகளின் வளர்ச்சிக்கான முதலீடுகளாக நாங்கள் பார்க்கின்றோம். அந்த வகையில், அந்தத் திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது.
உங்களை எல்லாம் பார்க்கின்ற நேரத்தில் ஏதோ பணிகளை எல்லாம் நிறைவு செய்துவிட்டோம், முடித்துவிட்டோம் என்று சொல்லவில்லை, இன்னும் செய்யவேண்டும், இன்னும்
செய்யப் போகிறோம், இன்னும் செய்வதற்கான அந்த ஆக்கமும், உற்சாகத்தையும் நீங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள், தொடர்ந்து அந்த உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்குங்கள், வழங்குங்கள் என்று கேட்டு உங்களையெல்லாம். சந்திக்கின்ற நல்வாய்ப்பை பெற்றமைக்கு மீண்டும் ஒரு முறை என்னுடைய மகிழ்ச்சியை, நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்து விடைபெறுகிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்