தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளும் என்னுடைய தொகுதிகள்தான் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 31) தெரிவித்துள்ளார்.
சென்னை கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப்பைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பொன்னம்பல தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.
நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது,
“கொளத்தூருக்கு வந்தாலே புத்துணர்ச்சி!
தமிழ்நாடு முழுக்க நான் சுற்றிக் கொண்டிருந்தாலும், கொளத்தூருக்கு வருகின்றபோது என்னையே அறியாமல் ஒரு உற்சாகம், ஒரு ஊக்கம், ஒரு எழுச்சி ஏற்படுகின்றது.
அதுவும் கொளத்தூரில் இருக்கக்கூடிய மாணவச் செல்வங்களை பார்க்க வருகின்றபோது அதைவிட அதிகமான அளவிற்கு மகிழ்ச்சியும், எழுச்சியும் ஏற்படுகின்றது.
அதனால்தான், எவ்வளவு வேலைகள் இருந்தாலும், முடிந்த அளவுக்கு பத்து நாளுக்கு ஒரு முறையோ, வாரத்துக்கு ஒரு முறையோ கொளத்தூருக்கு நான் வந்து விடுகிறேன்.
கொளத்தூருக்கு வந்தாலே ஒரு புத்துணர்ச்சி எனக்கு ஏற்படுகிறது. எனக்காக கொளத்தூரை பாதுக்காக்கக் கூடியவராக என்னுடைய சார்பில் நம்முடைய அமைச்சர் சேகர்பாபு இருந்து கொண்டிருக்கிறார்.
கொளத்தூர் தொகுதியை பொருத்தவரைக்கும், நம்முடைய பணிகளால் ஒரு முன்மாதிரி தொகுதியாக இதை மாற்றிக் கொண்டிருக்கிறோம். இப்படி சொல்வதினால் எனக்கு ஏதோ ஒரு சுயநலம் (selfish) என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளும் என்னுடைய தொகுதிகள்தான். அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க் கட்சியாக இருந்தாலும் சரி, கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் சரி, தோழமைக் கட்சியாக இருந்தாலும் சரி, அனைத்து தொகுதிகளிலும் ஒரே கண்ணோட்டத்தோடு தான் நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொகுதிக்கும் முக்கியத்துவம்!
அந்த அடிப்படையில்தான், இந்த கொளத்தூர் தொகுதியில், புதிய வட்டாட்சியர் அலுவலகம், புதிய காவல் துணை ஆணையாளர் அலுவலகம், புதிய காவல் நிலையம், புதிய தீயணைப்பு நிலையம், புதிய சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவை விரைவில் அமைய இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவும் கொளத்தூர் தொகுதிக்கு மட்டும் இல்லை. தமிழ்நாட்டின் பல தொகுதிகளுக்கு வர இருக்கிறது. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், தங்களுடைய தொகுதிக்கு தேவையான பத்து திட்டங்களைக் கொடுக்கவேண்டும் என்று நான் சட்டமன்றத்தில் அறிவித்தேன்.
அது ஆளுங்கட்சி மட்டுமல்ல, எதிர்க்கட்சி மட்டுமல்ல, அனைத்து 234 தொகுதிகளில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் அவசரமாக உங்கள் தொகுதிக்கு முதற்கட்டமாக 10 திட்டங்களை கொடுங்கள். அந்த 10 திட்டங்களில் எதை உடனடியாக நிறைவேற்ற முடியுமோ இந்த ஆண்டிற்குள் நிறைவேற்றி தருகிறோம் என்று சொல்லி, அதை அறிவித்து, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கி அந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறோம்.
இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் கிடையாது. நம்முடைய மாநிலத்தில் மட்டும்தான். நம்முடைய திமுக ஆட்சியில்தான், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில்தான். நாம் எந்த விருப்பு வெறுப்பும் இல்லாமல் எதிர்க்கட்சியினர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளுக்கு முக்கியத்துவம் தந்து, திட்டங்களை எல்லாம் வரிசைப்படுத்தி, முறைப்படுத்தி, விரைவுப்படுத்தி செயல்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சி தான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி.
நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் அந்த வெற்றியை நம்முடைய தலைவருடைய நினைவிடத்திற்குச் சென்று நான் மாலை வைத்து, மரியாதை செய்தேன். அப்போது பத்திரிகை நிருபர்கள் என்னிடத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தபோது இடையில் ஒரு கேள்வி. அந்த கேள்விக்கு நான் பதில் சொன்னேன். இந்த ஆட்சி, எங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்காக மட்டுமல்ல; ஓட்டுப் போட தவறியவர்களுக்கும் சேர்த்து, அதாவது ஒட்டு போட்டவர்கள் மகிழ்ச்சியடையவேண்டும். ஒட்டுப் போடாதவர்கள் ஐய்யய்யோ இப்படிப்பட்ட ஆட்சிக்கு போடாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படக்கூடிய அளவிற்கு எங்கள் ஆட்சி இருக்கும் என்று அன்றைக்கு சொன்னேன். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.
தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியபோது,
” இந்து சமய அறநிலையத்துறையில் ஏராளமான திட்டங்கள்!
பல்வேறு திட்டங்கள் அதில் குறிப்பாக, நம்முடைய அய்யா பொன்னம்பல அடிகளார் வந்தவுடனே சொன்னார்கள். இதுவரைக்கும் அறநிலையத் துறையில் இப்படி ஒரு அமைச்சர் இருந்து பணியாற்றியதை நான் பார்த்ததே கிடையாது என்று என்னிடம் பெருமையாக சொன்னார்.
அந்த அளவிற்கு, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், அதில் அமைச்சராக இருக்கக்கூடிய சேகர் பாபு மற்றும் அவருடன் துணையாக இருக்கக்கூடிய அதிகாரிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
அதையெல்லாம் இப்போது பட்டியலிட்டு சொல்லவேண்டும் என்றால், நேரம் போதாது. இந்த நிகழ்ச்சி முழுக்க அது பற்றியேதான் பேசிக் கொண்டு இருக்கவேண்டும். இன்னும் பல நிகழ்ச்சிகளுக்கு நான் செல்ல வேண்டியிருக்கிறது. அதனால், ஹைலைட்டான சில திட்டங்களை தலைப்புச் செய்திகளாக மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.
இதுவரைக்கும் 1921 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தி இருக்கக்கூடிய ஆட்சிதான் இந்த திராவிட மாடல் ஆட்சி. 6147 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்களை மீட்டியிருக்கிறோம். கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகளை உருவாக்கி வருகிறோம். அதில் ஒரு கல்லூரிதான் மயிலை கபாலீஸ்வரர் கல்லூரி என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைப்பணியோடு கல்விப்பணி!
இறைப்பணியோடு சேர்த்து கல்விப் பணியையும் அறநிலையத் துறை செய்கிறது. அறநிலையத் துறையாக மட்டுமல்லாமல் இது அறிவுத் துறையாகவும் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், 748 மாணவ – மாணவியருக்கு கல்விக் கட்டணமும், கல்விக்குத் தேவையான கருவிகளையும் வழங்கியிருக்கிறோம்.
உங்களுக்கு மட்டுமில்லை, கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ஆம் நாள் இந்தக் கல்லூரியை திறந்து வைத்ததிலிருந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் 1,405 மாணவ மாணவிகளுக்கும் இதேபோல கல்விக் கட்டணம் மற்றும் கருவிகளை வழங்கியிருக்கிறோம்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
செல்வம்
”வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு தேவையின்றி வராதீங்க” : பினராயி வேண்டுகோள்!