புதிய கிரிமினல் சட்டத்தில் திருத்தம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு… ஸ்டாலின் உத்தரவு!

Published On:

| By Selvam

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இந்த புதிய சட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

குறிப்பாக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் முன்பாக ஜூலை 5-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜூலை 7-ஆம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பேசிய திமுக சட்டத்துறை செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ, “புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று இங்கிருக்கிறவர்கள் சொல்கிறார்கள். ஆனால், இங்கு நடந்துகொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி. தமிழக முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்.

நாம் டெல்லிக்கு செல்ல வேண்டியதில்லை. Concurrent லிஸ்டில் இருப்பதால், உரிய சட்ட திருத்தங்களை தமிழக அரசே கொண்டு வந்துவிடும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது. மத்திய அரசு இருக்கும் கொஞ்ச நாட்களில் வேறு ஏதாவது சட்டத்தை கொண்டு வருமா என்று தெரியவில்லை. வேறு ஏதாவது சட்டத்தை மாற்றினால் அந்த போராட்டத்தை டெல்லியில் வைத்து கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூலை 8) உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்து வந்த நிலையில், மத்திய அரசால் அவை “பாரதிய நியாய சன்ஹிதா, 2023”, “பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023” மற்றும் “பாரதிய சாக்ஷியா சட்டம், 2023” என மாற்றப்பட்டு, ஜூலை 1 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில், முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும், அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

நாடாளுமன்றத்தில் 146 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டு, மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை அறிந்துகொள்ள விருப்பமில்லாமல், மத்திய அரசு அவசர கோலத்தில் இச்சட்டங்களை நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஏதுமின்றி, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றியது.

நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையினரின் கருத்தினைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தப் புதிய சட்டங்களில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதைத் தெளிவாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது 17-6-2024 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஏற்கெனவே தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் இந்த புதிய சட்டத்தின் சில அடிப்படைப் பிரிவுகளில் தவறுகள் இருப்பதோடு, மாநில அரசுகளிடமிருந்து முழுமையாக கருத்துக்களைப் பெறாமல் இவை இயற்றப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்றும், முறையாக அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்ற பின்னரே இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் இப்புதிய சட்டங்களில் என்னென்ன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில்  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் வில்சன், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில், புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உட்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைத்திட, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழுவினை அமைத்திட ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இக்குழு இந்தப் புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, மாநில அளவில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு வழங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“ரவுடிகளுக்கு புரியும் மொழியில் ஆக்‌ஷன்”: கமிஷனர் அருண் பேட்டி!

ஜாமீன் பெற கூகுள் லொகேஷன்… முடியவே முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment