எதிர்க்கட்சிகள் மீட்டிங்: தேதியை மாற்றக் கோரும் மு.க.ஸ்டாலின்

Published On:

| By Kavi

வரும் ஜூன் 12ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ள சந்திப்பை மாற்றுத் தேதிக்கு ஒத்தி வைக்குமாறு கேட்டுள்ளதாகத் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிதீஷ் குமாரின் இந்த அறிவிப்பு முக்கியத் துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதோடு இந்த கூட்டத்தில் யார் யார் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஆர்ஜேடி, ஆம் ஆத்மி, என்சிபி, உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோன்று காங்கிரஸும் பங்கேற்கும் என்று அக்கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளரான ஜெய்ராம் ரமேஷ் எம்.பி.தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ், நிச்சயமாக கலந்து கொள்ளும். எனினும் கட்சி சார்பில் யாரை அனுப்புவது என்று இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இந்தச்சூழலில் 12ஆம் தேதிக்கு பதிலாக இந்த கூட்டத்தை வேறு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஜூன் 1) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “வரும் 12ஆம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கே ஒரு கூட்டத்தை கூட்ட இருப்பதாக ஒரு செய்தி இருக்கிறது.

அதுபோன்று 12ஆம் தேதி நிதிஷ் குமார் ஒரு கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்திருக்கிறார்.

அன்றைய தினம் மேட்டூர் அணையை திறந்து வைக்க இருப்பதால் தேதியை மாற்றி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டுமல்ல ஜனநாயகத்தைக் காப்பதற்காக இப்படிப்பட்ட ஒருங்கிணைப்பு அவசியம் தேவை” என்றார்.

பிரியா

திமுக நிச்சயம் எதிர்க்கும் : கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் ஆதரவு!

மு.க.ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் சந்திப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share