உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினின் ட்விட் வைரலாகி வருகிறது.
சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி கடந்த 23ஆம் தேதி சிங்கப்பூர் சென்ற முதல்வர், அங்கு 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஜப்பான் சென்றார்.
தமிழர்கள் அதிகம் வாழும் ஒசாகாவிற்கு சென்ற அவர், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது, ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் இருந்து புறப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் புல்லட் ரெயிலில் பயணம் செய்து தலைநகர் டோக்கியோவிற்கு செல்கிறார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம்.
உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரெயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை – எளிய – நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்” எனத் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
இதில் மறைமுகமாக மத்திய அரசால் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கிடையே தொடங்கப்பட்டு வரும் ’வந்தே பாரத்’ ரயிலை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புல்லட் ரயில்களுக்கு இணையான சேவை என்று தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில், ஏறக்குறைய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் அதே வேகத்தில் தான் இயக்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலினின் ட்விட் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஐ.டி. அதிகாரிகள் மீது தாக்குதல்: 8 திமுகவினர் கைது!
மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர்