சொத்துக்குவிப்பு வழக்கு: கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்த உத்தரவு ரத்து… சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 7) தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2006-2011ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை 2023-ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்தது.

அதேபோல 2006 – 2011 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் 2022-ஆம் ஆண்டு விடுவித்தது.

இந்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.

தங்கம் தென்னரசு வாதம்!

இந்த வழக்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ரமேஷ் ஆஜராகி, “ஆட்சி மாற்றத்துக்கு பின் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  ஆதாரங்களை புறக்கணித்துவிட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை எப்படி நியாயமான விசாரணையாக கருத முடியும்.

வழக்கில் முதல் புலன் விசாரணை அதிகாரி சேகரித்த ஆதாரங்களை மாற்றாமல், கூடுதல் ஆதாரங்களை சேர்ப்பது மறு விசாரணை கிடையாது. அது, மேல் விசாரணை ஆகும். இந்த விசாரணை காவல் கண்காணிப்பாளரின் ஒப்புதல் பெற்றே நடைபெற்றது.

மேல் விசாரணைக்கு பின், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்தால், சம்பந்தப்பட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கலாம். அதற்கு சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு எந்த தடையும் இல்லை” என்ற வாதத்தை முன்வைத்தார்.

உள்நோக்கத்துடன் மறு ஆய்வு வழக்கு!

அமைச்சர் ராமச்சந்திரன் தரப்பில், “தான் விடுவிக்கப்பட்ட ஒரு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க எந்த ஒரு அடிப்படை காரணமும் இல்லை. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றால் அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு எடுக்க வேண்டும். அமைச்சர் என்பதால் உள்நோக்கத்துடன் மறு ஆய்வு செய்யக்கூடாது” என்று வாதிடப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை வாதம்!

லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், “ஒரு வழக்கில் புதிய ஆவணங்கள் இல்லாதபோது அந்த வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு உரிமை உள்ளது.

புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கினாலும், விசாரணையின் முடிவில் தான் ஒருவர் குற்றவாளியா? இல்லையா? என்பது தெரியவரும். விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது ஆதாரம் இல்லை என்றால் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுதலை செய்யலாம்.

அமைச்சர்கள் மீதான வழக்குகளில் புகாரின் உண்மைத்தன்மை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி முடித்துள்ளது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் அமைச்சர்களை விடுதலை செய்துள்ளது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், “சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்  விடுவித்தது ரத்து செய்யப்படுகிறது.

செப்டம்பர் 9-ஆம் தேதி ராமச்சந்திரன், செப்டம்பர் 11-ஆம் தேதி தங்கம் தென்னரசு ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்து சாட்சி விசாரணையை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் மீண்டும் தொடங்க வேண்டும். தினசரி அடிப்படையில் வழக்கை நியாயமாக நடத்த வேண்டும்” என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு முதல்வரின் ஃபெலோஷிப் திட்டத்தில் பணி!

கலைஞர் நினைவு தினம்: ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts