நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதற்காக ரஜினி அங்கேயே தங்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
ரஜினி எங்கே தங்குவது என்று ஹோட்டல்களை தேடிய நிலையில் ஹோட்டல் இல்லாமல் நல்ல கெஸ்ட் ஹவுஸாக திருவண்ணாமலையில் இருக்குமா என்று விசாரித்துள்ளார் ரஜினி. அப்போதுதான் திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு குடும்பத்தாருக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி வளாகத்துக்குள் இருக்கும் கெஸ்ட் ஹவுஸ் சிறப்பாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இதையடுத்து ரஜினியே அமைச்சர் வேலுவிடம் பேச, ‘எப்போது வேண்டுமானாலும் வாருங்கள்’ என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் அமைச்சர் வேலு. உடனடியாக அமைச்சரின் மகன் குமரன், ரஜினி தரப்பினரைத் தொடர்புகொண்டு ரஜினி தங்கள் கெஸ்ட் ஹவுஸில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
ரஜினி திருவண்ணாமலைக்கு வந்ததும் குமரனே அவரை வரவேற்று அருணை கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்துச் சென்றார். அங்கே தங்கிதான் ரஜினி திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று வந்தார். அதன் பின் ஷூட்டிங்கிலும் பங்கேற்றார்.
கெஸ்ட் ஹவுஸுக்குள் நுழைந்ததுமே மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவப் படம் பெரிய சைசில் வைக்கப்பட்டிருக்கும். ரஜினிக்காக அறை முதல் மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கெஸ்ட் ஹவுஸுக்குள் சென்றதுமே கண்ணில் பட்ட கலைஞரின் படத்தைப் பார்த்ததும் ஓரிரு நிமிடங்கள் அப்படியே நின்றார். கலைஞர் படத்தை உற்றுப் பார்த்தபடியே நின்ற ரஜினி அதன் பின் முதல் மாடிக்கு செல்வதற்கு படிகளில் ஏறினார்.
அப்போது அமைச்சர் வேலுவின் மகன் குமரன், ‘இந்த கெஸ்ட் ஹவுஸில் ஸ்பெஷலான அறை இருக்கு. அந்த அறையிலதான் கலைஞர் வந்தா தங்குவாரு. முதலமைச்சர் ஸ்டாலின் இங்கே வந்தாலும் அங்கதான் தங்குவாரு. இப்போது உங்களுக்கும் அந்த அறையைதான் ஏற்பாடு செய்திருக்கோம்’ என்று சொல்ல, ‘அப்படியா.,.. ஃபைன் ஃபைன்’ என்றார் ரஜினி. ரஜினி படியேறிச் சென்ற வேகத்தைக் கண்டு அருணை ஊழியர்களே ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.

ரஜினி அங்கே வந்தபோது அமைச்சர் வேலு துறை ரீதியான பணிகள் காரணமாக வெளியூரில் இருந்தார். அதன் பின்னர்தான் அருணை கெஸ்ட் ஹவுஸுக்கு சென்று ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் அமைச்சர் எ.வ.வேலு. அப்போது ரஜினிக்கு திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கினார். கெஸ்ட் ஹவுஸ் பியூட்டிஃபுல்லா இருக்கு என்று பாராட்டிய ரஜினி… அந்த அறையின் ஜன்னல் ஓரம் நின்று திரைச் சீலைகளை இழுத்து சூரிய ஒளியை ரசித்திருக்கிறார்.
ரஜினியும் அமைச்சர் வேலுவும் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பேச்சு கலைஞர் பற்றி திரும்பியது. கீழே பார்த்த கலைஞரின் போட்டோவை சுட்டிக் காட்டிய ரஜினி, ‘என்னை ஒரு கூடப் பிறக்காத தம்பி மாதிரி பாத்துக்கிட்டாரு தெரியுமா?’ என்று கூறியுள்ளார்.
அமைச்சர் வேலுவும், கலைஞருடனான தனது அனுபவத்தில் நடந்த பல விஷயங்களை ரஜினியிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
‘இப்ப ஆட்சிக்கு வந்ததுமே முதலமைச்சர் ஸ்டாலின் விருப்பத்துக்கு இணங்க சென்னையில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூலகம், திருவாரூரில் கலைஞர் கோட்டம் ஆகியவை கட்டியது பற்றி சிலிர்த்துப் போய் ரஜினியிடம் விவரித்தார் வேலு. இப்போது மெரினாவில் கலைஞர் பேனா சிலை வைப்பது பற்றியும் கூட ரஜினியிடம் சொல்லியிருக்கிறார் அமைச்சர் வேலு. மெரினா பேனா சிலை பற்றிய சில விஷயங்களை ஆர்வமோடு கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார் ரஜினி.
‘திருவாரூர் கலைஞர் கோட்டம் பாத்துப் பாத்து கட்டியிருக்கோம். நீங்க வந்து பாத்தீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவீங்க’ என்று அமைச்சர் வேலு சொல்ல, ‘நீங்க சொல்லும்போதே பாக்கணும்னு தோணுது. டெஃபனட்டா நான் திருவாரூர் வர்றேன்’ என்று கூறியிருக்கிறார் ரஜினி.

ரஜினி அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெரும்பாலும் வெளியே சாப்பிடுவதில்லை. அதனால் எந்த ஊருக்கு ஷூட்டிங் சென்றாலும் அவருடனே சமையல் காரர்களும் சமையல் பொருட்களோடு வந்துவிடுவார்கள். அந்த வகையில் லதா ரஜினிகாந்த் திருவண்ணாமலைக்கும் சமையல் காரர்களை அனுப்பி வைத்துள்ளார்.
அதேநேரம் அமைச்சர் வேலு தரப்பில், ‘நீங்கள் விரும்பும் வகையில் நாங்களே சமைத்துத் தருகிறோம். இங்கே சமையல் கலைஞர்கள் இருக்கிறார்கள்’ என்று சொல்லி ரஜினிக்காக சமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். அவற்றை சாப்பிட்டுப் பார்த்த ரஜினி அருணை சமையல் கலைஞர்களின் சாப்பாட்டையே சாப்பிட்டு வருகிறார்.
காலையில் இட்லி, மதியம் கொஞ்சம் சாதம், காய்கறிகள், இரவில் லைட் டிபன் என்று மிக எளிய உணவையே சாப்பிட்டு வருகிறார் ரஜினி. ஷூட்டிங் இல்லாத நேரங்களில் அறையில் தனிமையிலேயே இருக்கிறார் ரஜினி. தன்னோடு சில புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கிறார். புத்தகங்கள் படிக்காத நேரத்தில் பெரும்பாலும் டிவியில் ஸ்போர்ட்ஸ் சேனல்களையே பார்த்து வருகிறார் ரஜினி.
ஷூட்டிங்கின்போது தனது மகள் ஐஸ்வர்யாவிடம், அருணை கெஸ்ட் ஹவுஸின் விருந்தோம்பலை ரசித்துச் சொல்லியிருக்கிறார் ரஜினி. விரைவில் திருவாரூர் கலைஞர் கோட்டத்தின் கலையழகை காண ரஜினி அங்கே செல்வார் என்கிறார்கள் ரஜினி வட்டாரத்தில்.
-வேந்தன்
கல்லூரிகளில் சேர்ந்து விலகும் மாணவர்கள்: யுஜிசி முக்கிய அறிவிப்பு!