அமைச்சர் பொன்முடி வழக்கு: ஜெயக்குமார் மனு!

Published On:

| By Selvam

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் முறைகேடு வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் தொடர்ந்து பிறழ் சாட்சியளித்து வந்த நிலையில் அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களையும் அனுமதிக்கக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி விழுப்புரம் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பொன்முடி அவரது மகன் கெளதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது 2012-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ஓய்வு பெற்ற வானூர் வட்டாட்சியர் குமாரபாலன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரன், கிராம உதவியாளர்கள் பூத்துறை ரமேஷ், கோபாலகண்ணன், நில அளவைத்துறை முன்னாள் துணை ஆய்வாளர் நாராயணன், கனிமளவத்துறை முன்னாள் துணை இயக்குனர் சுந்தரம், ஓய்வுபெற்ற வட்டாட்சியர் மாணிக்கம், ஓய்வுபெற்ற நில அளவையர் அண்ணாமலை, பொன் கெளதமசிகாமணிக்கு நிலத்தை குத்தகைக்கு தந்த பாஸ்கர் ஆகியோர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியமளித்துள்ளனர்.

செம்மண் குவாரி வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டவர்கள் பிறழ் சாட்சியங்களாக மாறி வருவதால் வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் அனுமதி கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் முன்னாள் அரசு தரப்பு வழக்கறிஞர் சீனிவாசன் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “செம்மண் குவாரி வழக்குப்பதிவு செய்யும்போது பொன்முடி ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால் வழக்கு விசாரணை முறையாக நடைபெற்றது. 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பொன்முடி இடம்பெற்ற பிறகு செம்மண் குவாரி வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியமளித்து வருகின்றனர். அரசு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக அலுவலர்கள் எப்படி சாட்சியம் அளிக்க முடியும். அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு எங்களையும் அனுமதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செல்வம்

அமைச்சர் பொன்முடி வழக்கு: ஜெயக்குமார் மனுத்தாக்கல்!

தனபால் மனநிலை பாதிக்கப்பட்டவர்: கொடநாடு சர்ச்சையில் இளங்கோவன் புகார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share