அரசு நிகழ்ச்சியில் உதவியாளரை அதட்டிய அமைச்சர் எம்.ஆர்.கே – சர்ச்சையான அந்த வார்த்தை!

Published On:

| By Selvam

அரசு நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தனது உதவியாளரை தரக்குறைவாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் தேசிய உணவு தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி இன்று (ஜனவரி 3) தொடங்கியது.

இந்த மாநாட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேச தொடங்கியபோது, “அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ஆரம்பித்தார்.

சட்டென திரும்பி, “பரசுராமன் எங்கே?…எருமை மாடா டா நீ…பேப்பர் எங்கே?” என்று டென்ஷனாக கேள்வி கேட்டார். அப்போது பேப்பருடன் ஓடி வந்த எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் உதவியாளர் அவரிடம் பேப்பரை கொடுக்க அதை கீழே வீசி எறிந்தார்.

பொது வெளியில் அரசு நிகழ்ச்சியில் தனது உதவியாளரை அமைச்சர் ஒருமையில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமைச்சரின் இந்த பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ”பாத்ரூம் தவிர அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா உள்ளது. எனவே அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பொது இடங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் அமைச்சர் இப்படி பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

மோடி முதல் விஜய் வரை : வேலுநாச்சியாருக்கு புகழாரம் சூட்டிய அரசியல் தலைவர்கள்!

12 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீசாகும் விஷால் படம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share