தமிழக அமைச்சரவையானது நேற்று (செப்டம்பர் 28) மாற்றியமைக்கப்பட்டது. அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டனர். புதிதாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி.செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் தொழில்நுட்பத்துறை மற்றும் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது அந்தந்த துறைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (செப்டம்பர் 29) வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “2021 – தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5% என்றிருந்தது. ஒரே ஆண்டில் 2022-ல் 16.4% மாகவும், 2023-ல் 25% மாகவும் உயர்ந்தது.
2023-ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது. 2024-ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது.
விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன்.
இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி. மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…