நகராட்சி துறை – சென்னைக்கு புதிய அறிவிப்புகள்!
இன்று (மார்ச் 30) தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது சென்னை மாநகராட்சிக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்.
பள்ளி கட்டடங்கள் மேம்படுத்துதல்
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 281 பள்ளிகளில் 39 பள்ளிகளை மேம்படுத்த கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் உள்ள 139 பள்ளிகள் புதிதாக பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
எனவே இந்த ஆண்டு 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பள்ளி கட்டிடங்கள் மேம்படுத்தப்படும்.
பெருங்குடியில் சுற்றுச்சூழல் பூங்கா
சென்னை மாநகரின் தெற்கு பகுதியில் 225 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் பழைய குப்பை கழிவுகளை உயிரியல் அகழ்ந்தெடுத்தல் முறையில் நிலத்தை மீட்டெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலத்தின் ஒரு பகுதியில் தொல்காப்பிய பூங்காவை போன்று புதிதாக ஒரு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சமுதாய நலக்கூடங்கள்
கொளத்தூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, வேளச்சேரி மற்றும் ஆலந்தூர் ஆகிய ஏழு இடங்களில் தலா 5 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடங்கள் அமைக்கப்படும்.
பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள்
சென்னையில் 786 பூங்காக்கள் உள்ளன. சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் 178 பூங்காக்கள் மற்றும் 68 விளையாட்டு திடல்கள் புதிதாக அமைக்க மற்றும் மேம்படுத்த ஆணைகள் பெறப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இந்த நிதியாண்டில் மேலும் 50 பூங்காக்கள் மற்றும் 10 விளையாட்டு திடல்கள் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
நீர்நிலைகள் புனரமைத்தல்
சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டுகளில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 12 நீர் நிலைகளை 9.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்க ஆணைகள் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிலும் மேலும் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் உள்ள நீர் நிலைகள் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புலியூர் கால்வாய் புனரமைத்தல்
சென்னை மாநகராட்சியில் உள்ள புலியூர் கால்வாய் என்கிற டிரஸ்ட்புரம் கால்வாய் மத்திய சென்னையில் முக்கிய நீர் வழியாகும். இந்த கால்வாயை சீரமைப்பதால் கால்வாயின் கொள்ளளவு அதிகரிப்பதுடன், அப்பகுதியில் மழைநீர் தேங்குவது தவிர்கப்படும். இக்கால்வாயை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் மூலம் 14.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
பேட்டரி வாகனங்கள் கொள்முதல்
சென்னை மாநகராட்சியில் வீடுகளில் சேரும் குப்பைகளை வீடு வீடாக சென்று நேரில் சேகரிக்கவும் மற்றும் குப்பை சேகரிக்கும் பணியினை துரிதப்படுத்தவும் புதிதாக 350 பேட்டரி வாகனங்கள் 6.90 ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
செறியூட்டப்பட்ட உயிரி எரிவாயு கலன்
சென்னை மாநகராட்சியில் உருவாகும் ஈர மற்றும் உணவு கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு தயாரிக்க தற்போது இரண்டு பகுதிகளில் 100 எம்டி திறன் கொண்ட செறியூட்டப்பட்ட உயிரி எரிவாயு கலன்கள் இயங்கி வருகின்றன.
2022ஆம் ஆண்டில் நான்கு ஆண்டுகளுக்கான பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு இரண்டு ஆலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டில் பொது தனியார் பங்களிப்புடன் தினமும் 500 எம்டி திறன் கொண்ட புதிய பயோ சிஎன்ஜி வட சென்னையில் நிறுவப்படும்.
நவீன தகன மேடைகள்
சென்னையில் 15 இடங்களில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும்
தொல்காப்பிய பூங்கா மறு மேம்பாடு
அடையாறு உப்பங்கழியில் 58 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வரும் தொல்காப்பிய பூங்காவில் பார்வையாளர்கள் மையம், நடைபாதை, பார்வையாளர் தளம் ஆகியவற்றின் மறுசீரமைப்பு பணிகள் 42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
குடிநீர் மேம்பாட்டு பணிகள்
சென்னை மாநகராட்சி பகுதி 14 மற்றும் 15 இல் அமைந்துள்ள ராஜீவ்காந்தி சாலை, எம்.ஜி.ஆர் நகர் பிரதான சாலை ,தரமணி இணைப்பு சாலை மற்றும் 200 அடி சாலை ஆகிய இடங்களுக்கு 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
மற்ற முக்கிய அறிவிப்புகள்
சென்னை மாநகராட்சியில் கூவம் ஆற்றின் 23 இடங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் பணிகள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
கண்ணகி நகர் மற்றும் கன்னிகாபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு புதிய குழாய்கள் பதித்து, ஒவ்வொரு குடியிருப்புக்கும் குடிநீர் விநியோகிக்கும் பணிகள் 89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
புழல் மற்றும் சூரப்பட்டில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 300 மில்லியன் லிட்டர் மற்றும் 14 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கும் திறனுடைய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
கொருக்குப்பேட்டையில் பத்து மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர் தேக்க தொட்டி, 3 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் விடுபட்ட 25 தெருக்களுக்கு புதிய குழாய்கள் அமைத்தல் ஆகிய பணிகள் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
கொளத்தூர் பகுதியில் சுமார் 20 கிலோமீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் குழாய்களை மேம்படுத்தும் பணி 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பணிமனைகள் 62,63,115,116ல் உள்ள பிரதான கழிவு நீர் குழாய்களை மேம்படுத்தும் பணி ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
ஈ.வி.கே சம்பத் சாலையில் சாலையோர கழிவு நீரகற்ற நிலையம் அமைக்கும் பணி மற்றும் உந்து குழாயை புரசைவாக்கம் கழிவுநீர் அகற்று நிலையம் வரை பதிக்கும் பணி 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
சென்னை பெருநகரிலுள்ள அனைத்து கழிவு நீர் கட்டமைப்புகளின் செயல்பாடுகளும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரித்து வெளியேற்றப்படும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரின் தர அளவுகளும் நிகழ்நிலைமுறையில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்பத்துடன் கண்காணிக்கப்படும் என்று அறிவித்தார் அமைச்சர் கே.என்.நேரு.
பிரியா
பேராசியரின் பாலியல் தொல்லை: கலாஷேத்ரா மாணவிகள் போராட்டம்!
நந்தினி, குந்தவை, பூங்குழலி: பாரதிராஜாவின் காதல் பேச்சு!