முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவரான எம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஒரு சகாப்தம் என்றும், அவரது உயரிய எண்ணங்கள் அனைத்தையும் இன்று பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர்களில் எம்.ஜி.ஆர் பெயர் முக்கியமானது. மூன்று முறை தமிழக முதல்வர் பொறுப்பிலிருந்தும், தான், தனது குடும்பம் என்று எண்ணாமல், தமிழக மக்களுக்காக உழைத்தவர். பெருந்தலைவர் காமராஜரைப் போலவே, நேர்மையும் நுண்ணறிவும் கொண்ட தலைவராக விளங்கியவர் எம்.ஜி.ஆர்.
சமூகத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காகவே தமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டவர். வறுமை ஒழிப்பு மற்றும் சமூக சமத்துவத்தை இலக்காகக் கொண்ட நேரடி நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். அவரது நிர்வாகம், சமூகத்தின் விளிம்புநிலை மக்களை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தியது.
ஒட்டுமொத்த சமூகத்தையும் மேம்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தியது என்றால் மிகையாகாது. தமது ஆட்சியில், தமிழ்க் கலாச்சாரம், தமிழ் மொழி மற்றும் கலைகளை ஊக்குவித்தார்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில், சமூக நலன், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் தமிழகம் அர்ப்பணிப்புடன் இருந்தது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது, அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியிட்டதோடு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் சூட்டிப் பெருமைப்படுத்தியதும் பிரதமர் மோடி தான்.
எம்.ஜி.ஆரின் உயரிய எண்ணங்கள் அனைத்தையும் இன்று பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். ஆயிரத்தில் ஒருவரான எம்ஜிஆரின் வாழ்க்கை, ஒரு சகாப்தம்” இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மின்சாரம் தாக்கி தொழிலாளர்கள் பலி: தேசிய மனித உரிமைகள் ஆணையம் எடுத்த அதிரடி!
சென்னை கால்வாய்களில் சுவர்கள், வலைகள் அமைக்கும் மாநகராட்சி!
ஹெல்த் டிப்ஸ்: அல்சர்… அலட்சியப்படுத்தாதீர்கள்!
பியூட்டி டிப்ஸ்: ஆண்களின் க்ளென்சரை பெண்கள் உபயோகிக்கலாமா?
டாப் 10 நியூஸ் : எம்.ஜி.ஆர் நினைவு நாள் முதல் அல்லு அர்ஜூன் ஆஜர் வரை!