சென்னை அயனாவரத்தில் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் கல்லூரி பயின்று வருகிறார். இவருக்கு சமீபத்தில் ஸ்னாப்ஷாட் எனப்படும் ஆன்லைன் ஆப் மூலம் சிலர் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் இளம்பெண்ணிடம் பேசி வந்த சில நாட்கள் கழித்து நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை நம்பிச் சென்ற மாணவி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடத்தில் கூறவே அவர்கள் போலீசில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (டிசம்பர் 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அயனாவரம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், கடந்த பல மாதங்களாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்து, மாணவியின் தந்தை, சென்னை அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், குற்றவாளிகளை வெறும் எச்சரிக்கையோடு விடுதலை செய்திருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
மாணவியின் உறவினர் ஒருவர் முயற்சியால், தற்போது மீண்டும் வழக்குப் பதிவு செய்து, இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்திருப்பதாகவும், ஐந்து பேர் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கூறுகின்றனர்.
பாலியல் வன்முறை குறித்த புகாருக்கு, வெறும் எச்சரிக்கையோடு மட்டும் விடுதலை செய்யும் அதிகாரம், காவல்துறைக்கு யார் கொடுத்தது?
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏற்கனவே அதல பாதாளத்தில் கிடக்கும்போது, பெண்கள், குறிப்பாக மன நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருப்பதை, எத்தனை எளிதாகக் கடந்து சென்றிருக்கிறார்கள்?
நாட்டில் பிற மாநிலங்களில் நடக்கும் குற்றச் செயல்களுக்கெல்லாம், முழு விவரம் தெரியும் முன்னரே நான்கு பக்கத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் இந்தச் சம்பவம் குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார்?
தன் பொறுப்பில் இருக்கும் தமிழகக் காவல்துறையை அவர் என்ன ரீதியில் கையாண்டு கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. உடனடியாக, முதலமைச்சர் ஸ்டாலின் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆஸ்திரேலியாவின் அபார வெற்றியால் இந்தியா பின்னடைவு! மோசமான சாதனை பட்டியலில் ரோகித்