விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கு முன்பாக, அதாவது கடந்த 2024 ஜூன் 11 ஆம் தேதி விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் செஞ்சி மஸ்தான். சரியாக 7 மாதங்கள் கழித்து மீண்டும் அதே விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவிப் பறிக்கப்பட்ட குறுகிய காலத்தில் மஸ்தான் மீண்டும் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டது திமுகவில் பரபரப்பாக பேசப்படுகிறது.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலின் போது…
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு மாசெ.வாக இருந்த புகழேந்தி வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் காலமானதால் ஏற்பட்ட காலியிடத்துக்கு மாவட்டப் பொறுப்பாளராக வன்னியரை நியமிக்கவே நினைத்தார் ஸ்டாலின். ஆனால் அப்போது பொன்முடியின் அழுத்தம், மற்றும் உதயநிதியின் ஆதரவின் பேரில் முன்னாள் கள்ளக்குறிச்சி எம்.பி. கௌதம சிகாமணி நியமிக்கப்பட்டார். Masthan again got district secretary

இதன் சைடு எஃபெக்ட்டாக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளரான (அப்போதைய அமைச்சர்) மஸ்தானை மாற்றிவிட்டு, அந்த இடத்தில் ஒரு வன்னியரை நியமிக்க முடிவு செய்தது தலைமை. விழுப்புரம் தெற்கு, வடக்கு இரு மாவட்டங்களிலும் வன்னியர் அல்லாத மாவட்டச் செயலாளர்களை திமுக வைத்திருந்தால், விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் இதையே பாமக ஒரு பிரச்சினையாக கிளப்பும் என்பதால் இந்த முடிவெடுத்தது திமுக தலைமை.
இந்த சூழல் மஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டு, அவரை மாசெ பதவியில் இருந்து அகற்றிவிட்டு, அவர் பரிந்துரைத்த, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் சேகரை மாவட்ட செயலாளராக நியமித்தார் ஸ்டாலின். Masthan again got district secretary
அதிக லீடிங் கொடுத்தற்கு பரிசா?

ஆனால் இது கட்சிக்குள் வேறு மாதிரியும் பேசப்பட்டது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில். விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குள் செஞ்சி மஸ்தானின் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி மட்டும் வருகிறது. அந்த தொகுதியில் 26 ஆயிரத்து 346 வாக்குகள் விசிக வேட்பாளருக்கு லீடிங் எடுத்துக் கொடுத்தார் மஸ்தான். விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலேயே அதிக லீடிங் கொடுத்தது மஸ்தான் எல்லைக்குள் வரும் திண்டிவனம்தான்.
அதேநேரம் பொன்முடி தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திருக்கோவலூர் தொகுதியில் திமுக கூட்டணி விசிக வேட்பாளர் ரவிக்குமார், அதிமுக வேட்பாளரை விட 1898 ஓட்டுகள் குறைவாக பெற்றார். இப்படி 26 ஆயிரம் ஓட்டுகள் லீடிங் எடுத்துக் கொடுத்த மா.செ. மஸ்தான் பதவி இழந்ததும், சுமார் 2 ஆயிரம் ஓட்டுகள் குறைவாக எடுத்துக் கொடுத்த பொன்முடியின் மகன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதும் விசித்திரமாக பேசப்பட்டன. இதன் பின் ஒரு கட்டத்தில் மஸ்தான் அமைச்சரவையில் இருந்தும் நீக்கப்பட்டார். Masthan again got district secretary
விழுப்புரம் விசிட்டில் ‘முடிவெடுத்த’ முதல்வர்

அதேநேரம் விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட டாக்டர் சேகர் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகங்களில் தலையிடுவதாக தலைமைக்கு பல புகார்கள் சென்றன.
இந்நிலையில் சமீபத்தில் விழுப்புரம் கள ஆய்வுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் சென்று வந்தார். அந்த விசிட்டுக்கு முன்னும் பின்னும் ’பென்’ அமைப்பு முதல்வருக்கு சில ரிப்போர்ட்டுகளைக் கொடுத்தது. அதில் மாவட்டச் செயலாளர், அமைச்சர் என இரு பதவிகள் இல்லாதபோதும் மஸ்தான் கட்சிப் பணிகளில் தொய்வில்லாமல் செயல்பட்டு வருகிறார், கட்சியினரின் நல்லது கெட்டதுகளில் தொடர்ந்து பங்கெடுத்து வருகிறார் என குறிப்பிட்டிருந்தது.
இந்த பின்னணியில்தான் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்ட ஏழு மாதங்களிலேயே மீண்டும் அப்பதவியை பெற்றிருக்கிறார் மஸ்தான். Masthan again got district secretary
பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற சென்றிருந்தார் மஸ்தான். அப்போது நூற்றுக்கணக்கான நிர்வாகிகளை கூட்டிச் சென்றிருக்கிறார்.

மஸ்தான் வாழ்த்து பெறும்போது, ‘என்ன மஸ்தான்… இவ்ளோ கூட்டத்தைக் கூட்டி வந்துட்டீங்க?’ என்று முதல்வர் ஸ்டாலின் கேட்க…. மஸ்தான் சிரித்திருக்கிறார்.
அப்போது அருகே இருந்த துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, ‘நாங்கள்லாம் ஊருக்கு போனாலே அப்படி வரவேற்பு கொடுப்பாரு… இப்ப தலைவரை பார்க்க வந்திருக்கார்ல…’ என்று சொல்லிச் சிரித்திருக்கிறார்.
மஸ்தான் மீண்டும் மாவட்டப் பொறுப்பில் நியமிக்கப்பட்டதன் மூலம், பதவியை விட்டு நீக்கப்பட்டாலும் அவர்களது தொடர் உழைப்பின் பேரில் மீண்டும் பதவி பெற வாய்ப்புள்ளது என சொல்லியிருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலய வட்டாரங்களில்.