அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் நிறுவன வளத் திட்டமிடலுடன் ஒருங்கிணைக்கப்பட்ட கற்றல் மேலாண்மை அமைப்பு மென்பொருள் ரூ.150.00 கோடியில் நிறுவப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் 23 புதிய அறிவிப்புகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (மார்ச் 31 ) வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:
5 அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழிலகங்கள் தேவைகளுக்கேற்ப புதிய தொழிலிடைக் கல்வி பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.
அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகளிலும் மேம்படுத்தப்பட்ட உற்பத்திக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.
7 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 31 அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு 1 gbps அளவிலான தொடர் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சென்னை மற்றும் மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மையம் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் நிறுவன வளத் திட்டமிடலுடன் ஒருங்கிணைக்கப்பட்ட கற்றல் மேலாண்மை அமைப்பு மென்பொருள் ரூ.150.00 கோடியில் நிறுவப்படும்.
கோயம்புத்தூர் அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் அரசு மகளிர் பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகளில் மின்சார வாகன இயக்க மையம் நிறுவப்படும்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் புதிதாக தொடங்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
3 அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர்கள் கல்வி பயிலும் பொழுதே வருமானம் ஈட்டும் பட்டயப்படிப்பு அறிமுகப்படுத்தப்படும்.
5 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை வணிக மேலாண்மை பட்டப்படிப்பு MBA, 5 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை கணினி பயன்பாட்டில் MCA பட்டப்படிப்பும் தொடங்கப்படும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் நாப்கின் எரிப்பான் இயந்திரம் வழங்கப்படும்.
2012 -13ம் ஆண்டு மற்றும் 2022 – 23ம் ஆண்டு தொடங்கப்பட்ட 5 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் ரூ.68.55 கோடி செலவில் கட்டப்படும்.
பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.180 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதியதாக கட்டப்பட்ட வகுப்பறைகளுக்குத் தேவையான தளவாடங்கள் ரூ.10 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்.
அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் கூடுதல் உணவகக்கூடம் ரூ.5.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் வளாகத்திலுள்ள விடுதிகளில் இணையவசதி ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
அண்ணா பல்கலைக்கழக கோயம்புத்தூர் மண்டல வளாகத்தில் புதிய கல்விக் கட்டடம் ரூ.15.51 கோடி செலவில் கட்டப்படும்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 5 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மனிதவள மேம்பாட்டு பயிற்சி அரங்கம் ரூ.3.50 கோடி செலவில் நிறுவப்படும்.
சென்னை பல்கலைக்கழகத்திலுள்ள புகழ்பெற்ற நூற்றாண்டு விழா மண்டபம் புதுப்பிக்கப்படும்.
சென்னை பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் பெண்கள் விடுதி கட்டப்படும்.
தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித் தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் குறைவான மாணவர்கள் சேர்க்கை உள்ள ஒரு சில பாடப்பிரிவுகளை நீக்கி புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பொதுச் செயலாளர் ஆனதும் எடப்பாடி பங்கேற்ற முதல் நிகழ்ச்சி!
பொதுச்செயலாளர் எடப்பாடி: தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள்!
