டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரளா முதல்வர் பினராயி விஜயனை தொடர்ந்து ஆளுநருக்கு எதிரான விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி இன்று(ஏப்ரல் 19) ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனிதீர்மானம் கொண்டு வந்தார்.
சட்டப்பேரவையில் இருந்து நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் உரிய காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க வேண்டுமென மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பாஜக ஆளாத மாநில முதல்வர்களுக்கு இதேபோல் தங்கள் மாநிலங்களிலும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார். இந்த கோரிக்கையை சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஏற்றுக்கொண்டனர்.
இந்த வரிசையில் தற்போது 3வது நபராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இணைந்துள்ளார். அதாவது மம்தா பானர்ஜி முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மம்தா பானர்ஜி இன்று(ஏப்ரல் 19) தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர்.
இதையடுத்து ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானத்துக்கு அவர் வரவேற்பு தெரிவித்து ஆதரவு வழங்கினார். மேலும் ஆளுநர்களுக்கு எதிரான அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர் கூட்டத்தை கூட்ட வேண்டும் என மம்தா பானர்ஜி, முதல்வர் ஸ்டாலினுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பல் பிடுங்கிய பல்வீர் சிங்: எப்.ஐ.ஆரில் இருப்பது என்ன?
பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன்: தனி விமானத்தில் சுற்றும் படக்குழு!