காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற மல்லிகார்ஜுன கார்கே வரும், 26ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 7,897 வாக்குகள் பெற்று அக்கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வாகி இருக்கிறார்.
24 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் இந்தியாவின் பழம்பெருமைமிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவராகி இருப்பது அக்கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, கார்கேவுக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. தேர்தல் முடிந்த பிறகு, கார்கேவின் இல்லத்திற்குச் சென்று முதலில் வாழ்த்து தெரிவித்தார் சசி தரூர். அதுபோல், சோனியா காந்தி மற்றும் அவரது மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் கார்கேவின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் ஸ்டாலினும் கார்கேவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தனர். தொலைபேசி மூலம் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார்.
இப்படி, கார்கேவுக்கு நாடு முழுவதும் தொடர்ந்து வாழ்த்துகள் குவிந்தவண்ணம் இருக்கிறது. இதனால் அவருக்கு வாழ்த்து சொல்லும் அனைவருக்கும், அவரால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.
இதற்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று (அக்டோபர் 20) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தொடர்ந்து உங்கள் அனைவருடைய வாழ்த்துகளும் குவிந்துவருகிறது. அதற்கு பதிலளிக்க முடியாமல் போனதற்கு என் மனப்பூர்வமான மன்னிப்பை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் ஆதரவே என் மகிழ்ச்சி. நன்றி” என அதில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே, வரும் 26ம் தேதி பதவியேற்க உள்ளார்.
ஜெ.பிரகாஷ்