முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 19) ஈரோடு மாவட்டம், நஞ்சனாபுரம் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2 கோடியாவது பயனாளி சுந்தரம்பாள் (வயது 55) என்பவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து மருந்து பெட்டகத்தை வழங்கினார்.
அடுத்ததாக தொடர் சேவை சிகிச்சையில் உள்ள வசந்தாவை சந்தித்து நலம் விசாரித்து மருந்து பெட்டகத்தை வழங்கினார். இந்நிகழ்விற்கு பிறகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியபோது,
“மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்!
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2021 ஆகஸ்ட் திங்கள் 5 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டபோது ஸ்டாலின் சொன்னது, முதல் பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை தருகிறேன்.
ஒரு கோடியாவது பயனாளிக்கும் மருந்து பெட்டகத்தை தருகின்ற நிகழ்வு தமிழ்நாட்டில் நடைபெற வேண்டும் என்று சொன்னார்.
இந்த திட்டத்தில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இயன்முறை சிகிச்சை, டயாலிஸிஸ் என்று தொற்றா நோய்களுக்கான மருத்துவத்தை வீடுகள் தோறும் தேடிச் சென்று மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது, மருந்துகள் தருவது ஆகியவை அடங்கும்.
அந்தவகையில், இந்த திட்டத்தில் 50 லட்சமாவது பயனாளிக்கு சித்தாலப்பாக்கத்தில் உள்ள ஒருவருக்கு மருந்து பெட்டகத்தை முதல்வர் வழங்கினார்.
மீண்டும் முதலமைச்சர் திருச்சிக்கு வருகை புரிந்து 1 கோடி 1வது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை தந்தார். அந்தவகையில் இத்திட்டம் படிப்படியாக வளர்ந்து ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களை சென்றடைந்திருக்கின்றது என்கின்ற வகையில் 2 கோடியாவது பயனாளியாக சுந்தரம்பாள் (வயது 55) என்கின்ற பெண்மணிக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சனாபுரம் கிராமத்தில் தேர்வு செய்யப்பட்டு இன்று மருந்து பெட்டகம் தரப்பட்டிருக்கிறது.
அந்தவகையில் தொடர் சேவைப் பெறுபவர்கள் 4,29,71,772 பேர் இதில் பயன்பெற்று வருகிறார்கள்

ஐக்கிய நாடுகள் சபை விருது!
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் ஐ.நா சபையில் உலகில் தொற்றா நோய்களுக்காக மக்களைத் தேடி மருத்துவம் பார்க்கும் திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால் 2024ஆம் ஆண்டிற்கான ஐ.நா மன்றத்தின் விருதும் கிடைக்கப்பெற்றுள்ளது. United Nation Interagency Task Force Award 2024 என்கின்ற வகையில் விருது தரப்பட்டுள்ளது. அன்று விருது அறிவிக்கப்படும்போது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 97 இலட்சம் பேர் பயனடைந்து இருந்தனர்.
இன்று 2 கோடியாவது பயனாளிக்கு முதலமைச்சர் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. இது இந்த திட்டத்தின் வெற்றியை வெளிப்படுத்துகிறது.
திட்டத்தில் உள்ள பல்வேறு சிகிச்சைகள்!
உயர் இரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 1,00,01,363 பேர், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 49,45,745 பேர், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 44,28,972 பேர், நோய் ஆதரவு சிகிச்சை பெறுபவர்கள் 5,40,822 பேர், இயன்முறை சிகிச்சை பெறுபவர்கள் 7,25,042 பேர், சிறுநீரகம் சிகிச்சை (டயாலிஸிஸ்) பெறுபவர்கள் 434 என்கின்ற வகையில் இதுவரை 2 கோடியை கடந்து இந்த சிகிச்சைகள் சென்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல் தொடர் சேவை என்கின்ற வகையில் 04,29,71,772 பேர் பயன்பெற்றுள்ளார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் நிலவரம்!
ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை 7 லட்சத்திற்கும் மேலானவர்கள் இந்த சிகிச்சையில் பயன்பெற்று வருகிறார்கள். மேலும் நஞ்சனாபுரம் பகுதியில் மட்டுமே 1005 என்கின்ற வகையில் மக்கள் தொகை இருக்கின்றது.
இதில் 136 பேர் மருத்துவ பயன் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு புதிதாக சுந்தரம்பாள் என்பவருக்கு உயர் இரத்த அழுத்தம் நோய் இருப்பதை கண்டறியப்பட்டு அவருக்கு மருந்து பெட்டகம் தரப்பட்டிருக்கிறது.
மக்களைத் தேடி மருத்துவம் எனும் இத்திட்டத்தில் 14,000 மேற்பட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தவகையில் இன்று முதலமைச்சர் நேரில் வருகைபுரிந்து 2 பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார். முதலமைச்சரைப் பொறுத்தவரை இந்த திட்டத்தை தொடக்கத்திலிருந்தே கண்காணித்து இத்திட்டத்தின் வளர்ச்சியை தொடர் ஆய்வு செய்ததன் காரணமாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
அம்மா கிளினிக் தொடர்பான கேள்விக்கு “அம்மா கிளினிக்கில் 1,700 மருத்துவமனைகள் ஒரே ஒரு மருத்துவரோடு, செவிலியர் கூட இல்லாமல் இயங்கி வந்தது. சுடுகாடு போன்ற இடங்களிலும் இம்மருத்துவமனையை வைத்திருந்தார்கள். ஒரு மருத்துவரை வைத்து, அதுவும் கூட மாநில அரசின் நிதி ஆதாரம் இல்லை, NHM என்று சொல்லக்கூடிய தேசிய நலவாழ்வு குழுமத்தின் நிதி ஆதாரம் கொண்டு, ஒரு வருடத்திற்கு மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
ஒரு வருடம் கழித்து தானாகவே அந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது. இந்த அரசு அம்மா கிளினிக்கை மூடியது போன்று தோற்றத்தை அவர் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார். ஏற்கெனவே இது சம்மந்தமாக அதற்கான ஆணைகளை காண்பித்து சட்டமன்றத்தில் பதில் கூறினோம்” என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
செல்வம்