மதுரை: பிரஸ்மீட்டை பன்னீர் தவிர்த்தது ஏன்?

Published On:

| By Aara

மதுரை விமான நிலையத்துக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம், தன்னைச் சந்திப்பதற்காக காத்திருந்த பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசாமல் நழுவிச் சென்றுவிட்டார்.

சென்னையில் இருந்து இன்று (ஏப்ரல் 2) பகல் புறப்பட்டு மதுரை விமான நிலையத்துக்கு வந்தார் ஓ.பன்னீர் செல்வம். விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் ஓரளவுக்குத் திரண்டு நின்று கொண்டிருந்தனர்.

விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வரும் நிலையில், வழக்கமாக தலைவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திக்கின்ற இடத்தில் பத்திரிகையாளர்கள் போடியத்தின் மேல் அனைத்து சேனல் மைக்குகளையும் பொருத்தி வைத்துக் கொண்டு காத்திருந்தனர்.
விமானத்தில் இருந்து வெளியே வந்த ஓ.பன்னீர், தன்னை வரவேற்ற சிலரிடம் பேசிக் கொண்டே வந்தவர்… பத்திரிகையாளர்கள் காத்திருந்த இடத்தை மெல்லக் கடந்தார்.

அப்போது பத்திரிகையாளர்கள், ‘சார்… சார்…’என்று கேட்க, புன்னகைத்தபடியே மெல்ல நடந்து வெளியே சென்றார் ஓபிஎஸ். அங்கிருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு காரில் புறப்பட்டார் ஓபிஎஸ்.

வழக்கமாக மதுரை விமான நிலையத்துக்கு வந்தாலும், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டாலும் காத்திருக்கும் பத்திரிகையாளர்களிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டுத்தான் செல்வார் பன்னீர் செல்வம்.

சென்னை உயர் நீதிமன்றம், ‘பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், பொதுச் செயலாளர் தேர்தலும் செல்லும்’ என்று தீர்ப்பளித்ததற்குப் பிறகு மதுரைக்கு வரும் பன்னீர்செல்வம் தீர்ப்பு பற்றியும் அதிமுக விவகாரங்கள் பற்றியும் பதிலளிக்க வேண்டியிருக்குமே என்பதால்தான் பிரஸ்மீட்டை தவிர்த்துவிட்டார் என்கிறார்கள்.

பன்னீருக்கு நெருக்கமான சில பத்திரிகையாளர்கள் அவரிடம், ‘என்னண்ணே எதுவும் பேசாம வந்துட்டீங்க?’ என்று கேட்டதற்கு, ‘அப்பீல் போயிருக்கோம். கோர்ட்ல இருக்குற விவகாரத்தை பத்தி பேசிடக் கூடாதுல்ல…’ என்று சிரித்திருக்கிறார்.
-வேந்தன்

சென்னை டூ சேலம்: எடப்பாடியின் விஸ்வரூபம்!

டிஜிட்டல் திண்ணை: மோடி சென்னை விசிட்டில் புது கூட்டணிக்கு அச்சாரம்? அண்ணாமலையின் அதிரடி திட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel