ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான ஆதிராஜாராம் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் இன்று(செப்டம்பர் 15)தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற ஓ.பன்னீர்செல்வம், தனது பாதுகாப்பிற்கு வழங்கப்பட்ட போலீஸ் உதவியுடன் ஆயுதங்களுடன் சென்று அதிமுக கட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியதாகவும்,
போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்தியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிமுக சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளரும்,
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான ஆதிராஜாராம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆதி ராஜாராம் தாக்கல் செய்த மனுவில், “முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் பன்னீர்செல்வத்திற்கு வழங்கிய பாதுகாப்பை, அவர் தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.
பாதுகாப்பு போலீசார் உதவியுடனேயே அதிமுக அலுவலகத்தில் பன்னீர் செல்வம் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். முன்னாள் முதல்வரான பன்னீர்செல்வம் தற்போது அரசிலும், கட்சியிலும் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லை.
அவரது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிலையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார் மீதும், போலீஸ் பாதுகாப்பைத் தவறாக பயன்படுத்திய பன்னீர் செல்வத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை செயலாளருக்கும்,
டிஜிபி-க்கும் கடந்த மாதம் 15-ஆம் தேதி மனு அளித்த நிலையில், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால்,
தனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று ஆதி ராஜாராம் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், “இந்த வழக்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. இது விசாரணைக்கு உகந்ததல்ல.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கானது தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
செல்வம்
“அதிமுக அலுவலகத்திற்கு நிச்சயம் செல்வேன்” : சசிகலா