எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் உத்தரவு!
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட கோ வாரண்டோ வழக்கை நவம்பர் 3ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
2021 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.
தேர்தல் சமயத்தில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை மறைத்து, தவறான தகவல்களை தெரிவித்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம், இந்த கோ வாரண்டோ (பதவியில் இருந்து நீக்க கோரும் வழக்கு) வழக்கை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், `எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவில் சொத்து விவரங்களையும், கல்வித் தகுதியையும் மறைத்தது தவறான நடத்தை மட்டுமல்ல, அது ஊழல் நடவடிக்கையும் கூட எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில், சொத்துக்கள் குறித்த விவரங்களை மறைத்ததுடன், எம்.எல்.ஏ.வாக பெற்ற ஊதியத்தையும் தெரிவிக்கவில்லை.
சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்குக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எனவே எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும். எந்த தகுதியின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்கவும் உத்தரவிட வேண்டும்.
அவரை பதவி நீக்கம் செய்து, அவருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும்` என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (அக்டோபர் 16) தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவிப்பது தகுதியிழப்பு ஆகாது எனவும், இதுசம்பந்தமாக தேர்த்ல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து, வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்திருந்தால் தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் எனவும், தகுதியில்லாதவர் பதவி வகிப்பதை எதிர்த்து தான் கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்பதால் இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது எனவும் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
மனுதாரர் சார்பில் வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததால் கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்யலாம்.
தன் மீதான குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி மறுக்கவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தால் கோ வாரண்டோ வழக்கை தாக்கல் செய்யலாம் என்பது தொடர்பான தீர்ப்புகள் கொண்ட நகலை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தாமதமாக வந்த அதிகாரிகள்… மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி ஆக்சன்!
3வது கட்ட நடைபயணம்: மத்திய அமைச்சருடன் சென்ற அண்ணாமலை