விவசாயிகளுக்கு வட்டி மானியத்துடன் கடன்: விவசாயத்துறை அமைச்சர்!

அரசியல்

வேளாண்மை உட்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி வரை கடன் வசதி வழங்கப்படும் என்று வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், “விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை மதிப்புக்கூட்டி,

லாபகரமான விலைக்கு விற்பனை செய்யும் வகையில், அரசு, தனியார் நிறுவனம் மூலம் பல்வேறு உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கிராம அளவில் உட்கட்டமைப்புகளை உருவாக்க முன்வரும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வட்டி மானியத்துடன் கடன் வழங்கும் வகையில், மத்திய அரசின் வேளாண் உட்கட்டமைப்பு நிதி (Agriculture Infrastructure Fund) எனும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அ. அறுவடைக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கான கட்டமைப்புகளுக்கும், விவசாயிகள் ஒன்றிணைந்து, சமுதாய ரீதியாக உருவாக்கப்படும் வேளாண் கட்டமைப்புகளுக்கும் வங்கிகளில் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை இந்தத் திட்டத்தில் கடன் பெறலாம்.

ஆ. அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு ஏழு ஆண்டுகளுக்கு 3 சதவிகித வட்டி மானியம் வழங்கப்படும்.

இ. குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை (CGTMSE) திட்டத்திலிருந்து ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் அறுவடைக்குப் பின் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான உட்கட்டமைப்புகளுக்கும், விவசாயிகள் ஒன்றிணைந்து சமுதாய ரீதியாக உருவாக்கும் உட்கட்டமைப்புகளுக்கும் கடன் வசதி பெற முடியும்.

அ. அறுவடைக்குப் பின் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான உட்கட்டமைப்புகள் மின்னணு சந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை (Supply chain services including e-marketing platforms), சேமிப்புக் கிடங்குகள் (Warehouses), சேமிப்பு கலன்கள் (Silos), சிப்பம் கட்டும் கூடங்கள் (Pack Houses),

விளைபொருளின் தரத்தை அளவிடும் அமைப்புகள் (Assaying Units), தரம் பிரித்து, வகைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், குளிர்பதன வசதிகள் (Cold Chains), போக்குவரத்து வசதிகள் (Logistics Facilities), முதன்மை பதப்படுத்தும் மையங்கள் (Primary Processing Units),

அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகள் (Ripening Chambers), தகுதி வாய்ந்த கட்டமைப்புகளுக்கு சூரிய மின்சக்தி வசதி ஏற்படுத்துதல் போன்றவை.
ஆ. விவசாயிகள் ஒன்றிணைந்து சமுதாய ரீதியாக உருவாக்கும் உட்கட்டமைப்புகள் விவசாயிகள் குழுக்களாக இணைந்து,

விதை சுத்திகரிப்பு, திசு வளர்ப்பு, நாற்றுப் பண்ணை போன்ற இடுபொருள் உற்பத்தி, விநியோகத் தொடர் கட்டமைப்பு, வேளாண்மை இயந்திர வாடகை மையம், சூரிய சக்தி மூலம் இயங்கும் மோட்டார்,

இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், பண்ணைப் பணிகளையும், அறுவடைப் பணிகளையும் தானியங்கி மூலம் நவீனமயமாக்குதல், துல்லிய பண்ணையத்திற்கான உட்கட்டமைப்புகள்,

ஆளில்லா விமானம் (Drone), காளான் வளர்ப்பு மற்றும் பயிர் தொகுப்புகளை உருவாக்கி ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் போன்றவை.

ஒன்றிய அரசினால் இந்தத் திட்டம் தொடங்கிய 2020ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி அல்லது அதற்குப்பின் அனுமதிக்கப்பட்ட வங்கிகளில் தகுதியுள்ள உட்கட்டமைப்புகளுக்காக பெற்ற கடனுக்கு, இத்திட்டத்தின் கீழ், வட்டி மானியம் பெற முடியும்.

விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்புக்குழுக்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், விற்பனைக் கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில்முனைவோர்,

புதியதாக தொழில் துவங்க முன்வரும் நிறுவனங்கள் (Start ups), மத்திய / மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு-தனியார் பங்கேற்புடன் கூடிய அமைப்புகள்,

மாநில முகமைகள்/ வேளாண் விளைபொருட்கள் விற்பனைக் குழுமங்கள் (APMCs), தேசிய மற்றும் மாநில கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்புகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புகள், சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்புகள்,

நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் பெரு நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், உணவு பதப்படுத்துவோர், உபகரணங்கள் தயாரிப்போர் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் வசதி பெறலாம்.

இந்தத் திட்டத்தின்கீழ், கடன் வழங்குவதற்காக, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான முன்னோடி வங்கிகள், அதிகபட்சமாக 9 சதவிகித வட்டியில் கடன் வழங்குவதற்கு ஒன்றிய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://agriinfra.dac.gov.in எனும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தேசிய தோட்டக்கலை இயக்கம், வேளாண் இயந்திர மயமாக்குதலுக்கான துணை இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்களின் மானியத்தையும் இணைந்தே பெற்றுக் கொள்ளும் வசதி இந்தத் திட்டத்தில் உள்ளதால்,

மூன்று சதவிகித வட்டி (3%) தள்ளுபடியுடன் கடன் வசதி பெற விரும்புபவர்கள் தங்கள் திட்டத்திற்கான விவரங்களுடன் அருகில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்களையோ,

வங்கி மேலாளர்கள் அல்லது நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர்களையோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்கள்

-ராஜ்

வேளாண்மை மற்றும் உழவர் நலன்துறையின் ஓராண்டு சாதனைகள்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *