"Let's work thrice as hard" - Prime Minister Modi assured

மக்களவையில் எம்.பியாக பதவியேற்றார் பிரதமர் மோடி

அரசியல் இந்தியா

நாட்டு மக்களுக்காக மும்மடங்கு கடினமாக நாங்கள் உழைப்போம் என்று பிரதமர் மோடி இன்று (ஜூன் 24) உறுதியளித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமராக மோடி 3வது முறையாக பதவியேற்றார்.

மக்களவை உறுப்பினராக மோடி பதவியேற்பு

இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் இன்று (ஜூன் 24) மக்களவை முதல் அமர்வு நடைபெறுகிறது. அமர்வு தொடங்கியதும் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்.

முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மும்மடங்கு கடினமாக உழைப்போம்

அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்திய வரலாற்றில் இது ஒரு புகழ்பெற்ற நாள். முதல் முறையாக புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதுவரை நடைபெற்ற பதவியேற்புகள் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றது.

இந்த புகழ்பெற்ற நாளில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் நான் மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற கூட்டம் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். உலகின் மிகப்பெரிய தேர்தல் மிகவும் பிரம்மாண்டமாகவும், கோலாகலமாகவும் நடத்தப்பட்டது.

சுதந்திரத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக, ஒரு கட்சிக்கு மூன்றாவது முறையாக சேவை செய்யும் வாய்ப்பை நாட்டு மக்கள் வழங்கியிருப்பதால் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

60 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறை ஆட்சி அமைந்துள்ளது. எங்களின் நோக்கம், செயல்பாட்டுக்காக மக்கள் மூன்றாவது முறை எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் வழக்கமான பாரம்பரியத்தை கடைபிடிக்க முயற்சித்தோம். ஏனென்றால், நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான ஆட்சி முக்கியம். ஆட்சியை வழிநடத்த பெரும்பான்மை அவசியம்.

நாட்டை வழிநடத்த ஒருமித்த கருத்து மிக முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, 140 கோடி மக்களின் ஆசைகளையும் லட்சியங்களையும் நிறைவேற்றுவதற்கு அனைவரையும் அரவணைத்து செல்ல முயற்சிப்போம்.

நாளை ஜூன் 25. இந்த நாள் இந்திய ஜனநாயகத்தின் விழுந்த கறையின் 50 ஆண்டுகளைக் குறிக்கிறது. இந்தியாவில் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்ட 50வது வருடம். இந்த நாளில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை முற்றிலுமாக நிராகரித்தது, அரசியலமைப்பின் ஒவ்வொரு பகுதியும் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டது, நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.

ஜனநாயகம் முற்றிலும் நசுக்கப்பட்டது. அரசியலமைப்பை பாதுகாக்க நினைக்கும் இந்தியாவின் புதிய தலைமுறை இந்த நாளை ஒருபோதும் மறக்காது. 50 ஆண்டுகளுக்கு முன்பு செய்த இதுபோன்ற செயலை மீண்டும் இந்தியாவில் யாரும் செய்யத் துணிய மாட்டார்கள்.

நாட்டு மக்கள் எதிர்க்கட்சிகளிடம் இருந்து நல்ல நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றனர். ஜனநாயகத்தின் மாண்பையும், நாட்டின் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளையும் எதிர்க்கட்சிகள் நிறைவேற்றும் என நம்புகிறேன்.

நாடகங்களையோ, இடையூறுகளையோ மக்கள் விரும்பவில்லை. மக்களுக்கு கோஷங்கள் தேவையில்லை, வாழ்வாதாரம் தேவை. நாட்டுக்கு ஒரு நல்ல எதிர்க்கட்சி, பொறுப்புள்ள எதிர்க்கட்சி தேவை. இந்த 18-வது மக்களவையில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் மக்களின் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நாட்டு மக்கள் எனக்கு மூன்றாவது முறையாக ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளனர். இதன்மூலம் எங்களின் பொறுப்பு மும்மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, மூன்றாவது பதவிக்காலத்தில், நாங்கள் மூன்று மடங்கு கடினமாக உழைப்போம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Share Market: சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குசந்தை!

சட்டென குறைந்த தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0