அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டு விழா விவாதத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி கடந்த இரு தினங்களாக இரு அவைகளையும் எதிர்க்கட்சியினர் முற்றுகையிட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் இண்டியா கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் பதாகைகளை ஏந்தியபடி, அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பதிலுக்கு பா.ஜ. மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் ஒரே இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, பா.ஜ., எம்.பி., பிரதாப் சந்திரா சாரங்கியின் மண்டை உடைந்தது. ராகுல்காந்தி தன் மீது ஒருவரை தள்ளி விட்டு மண்டையை உடைத்ததாக பிரதாப் சந்திரா குற்றம் சாட்டியுள்ளார். அதே போல, மற்றொரு எம்.பியான முகேஷ் ராஜ்புத்தும் காயமடைந்துள்ளார். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து நாடாளுமன்ற செயல்பாடுகள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ‘ராகுல்காந்தி ஜப்பானிய தற்காப்பு கலையான அகிடோவில் பிளாக் பெல்ட் வாங்கியவர். சக எம்பிக்கள் மண்டையை உடைக்கத்தான் குங்பூ, கராத்தே எல்லாம் அவர் படிச்சாரா? நாடாளுமன்றம் என்ன ரெஸ்லிங் செய்யும் இடமா? ராகுல்காந்தியால் அவருடன் பணி புரியும் சக எம்.பிக்கள் தாக்கப்பட்டுள்ளனர் .தனது செயலுக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த பொது தேர்தலுக்கு முன்னதாக மணிப்பூர் முதல் மும்பை வரை ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரையை சுமார் 2 மாதங்கள் மேற்கொண்டார். அப்போது, ராகுல் காந்தி சுமார் 8 நிமிடங்கள் ஓடும் அக்கிடோ தற்காப்புக் கலை குறித்த வீடியோவை பகிர்ந்தார். அந்த வீடியோவில், அவர் குழந்தைகளுக்குத் தற்காப்புக் கலை குறித்த பல்வேறு நுட்பங்களைக் கற்பித்தார் . அகிடோ தற்காப்புக் கலையில் கருப்பு பெல்ட் வாங்கி இருப்பதாகவும் கூறியிருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
தமிழகத்தில் செயற்கை மின்வெட்டு: அண்ணாமலை
நைசாக கீர்த்தி சுரேஷை பொண்ணு கேட்டாரா விஷால்? வெளிவந்த உண்மை!