அதிமுக மாநிலங்களவை எம்.பி.ஆகவும், டான்சி வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞராகவும் இருந்த ஜோதி மீண்டும் திமுகவில் இன்று (நவம்பர் 27) இணைந்தார்.
அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் முக்கிய வழக்குகளை வெற்றிகரமாக நடத்தியவர் வழக்கறிஞர் ஜோதி. குறிப்பாக திமுக தொடர்ந்த டான்சி வழக்கில் ஜெயலலிதாவிற்காக ஆஜராகி வழக்காடினார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு திமுகவையும், 2ஜி வழக்குகள் குறித்தும் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி விமர்சித்தபோது அதற்கு திமுக எம்.பி ஆ.ராசா எதிர் விமர்சனம் வைத்தார். இதுதொடர்பாக தன்னுடன் விவாதிக்க தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு, ‘ஜெயலலிதா மீது ஆ.ராசா அவதூறு பரப்புகிறார் என்றும், அது குறித்து நான் விவாதிக்க தயார் என்றும் அதிமுகவின் வழக்கறிஞராக இருந்த ஜோதி சவால் விட்டார்.
எனினும் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மீது அவர் அதிருப்தியில் இருந்தார். இதன் காரணமாக அவர் அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தார். ஆனால் அவர் திமுகவிலிருந்து சிறிது காலம் விலகி இருந்தார்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சென்னை அறிவாலயத்தில் இன்று மாலை நேரில் சந்தித்த வழக்கறிஞர் ஜோதி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அப்போது அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மற்றும் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை: உதயநிதி பிறந்தநாள்… காத்திருந்த அமைச்சர்கள்… பறந்து வந்த திருமா
குறிஞ்சி இல்லத்தில் குவிந்த பிறந்தநாள் வாழ்த்து: உதயநிதி நன்றி!