அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நிலம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமாருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல்,
சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மற்றும் அவருடைய மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமாரும் மனு தாக்கல் செய்தனர்.
மனுவில் தனது மருமகனின் சகோதரர் மகேஷ் அளித்த பொய் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், 2016ல் நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு 2021ஆம் ஆண்டு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 2016ஆம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால் புகார் அளிக்க இயலவில்லை என்று மகேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜெயக்குமார் மீதான நிலஅபகரிப்பு வழக்கில் இரண்டு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நீதிபதி இளந்திரையன் இன்று(செப்டம்பர் 30)அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகாரில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அந்த வழக்கை நீதிபதி ரத்து செய்தார்.
மேலும் அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன் குமார் மீது பதியப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
கலை.ரா
பொன்னியின் செல்வன் : ரசிகர்களுக்கு தியேட்டரில் அதிர்ச்சி!
ஆர்எஸ்எஸூம் – சிபிஎம், சிபிஐ, விசிகவும் ஒன்றா?: திருமாவளவன் கேள்வி!