எலிப்பொறிக்குள் மோடி சிக்கிக்கொண்டு வெளியே வர வழி தெரியாமல் இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.
ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் இன்று (மார்ச் 26) காலை 10 மணி முதல் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசியபோது, “நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசக்கூடாது என்பதற்காக தான் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி கேள்விகளுக்கு ஆளும்கட்சி நாடாளுமன்றத்தில் பதில் கூற வேண்டும். ஹிட்லர், முசோலினியை போல மோடி செயல்படுகிறார்.
ராகுல் காந்தி சிறு குழந்தை அல்ல. அவர் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறார். அவருக்கு பதவி முக்கியமல்ல. மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் சந்திக்க அவர் தயாராக இருக்கிறார். ராகுல் காந்தி மேற்கொண்ட ஒற்றுமை நடைபயணத்தை பார்த்து பாஜகவினர் பயப்படுகிறார்கள். அதனால் தான் அவர்கள் ராகுல் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளார்கள். எங்களுடன் கூட்டணியில் இல்லாத கட்சிகள் கூட ராகுல் காந்தி தகுதி நீக்க நடவடிக்கையை கண்டித்துள்ளார்கள்.
எலிப்பொறிக்குள் மோடி சிக்கிக்கொண்டு வெளியில் வர வழி தெரியாமல் இருக்கிறார். உலகம் முழுவதும் சர்வாதிகாரிகள் தோல்வி அடைய தோல்வி அடைய எதை வேண்டுமானாலும் செய்வார்கள். மோடியும் அப்படி தான் செயல்படுகிறார். ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற உள்ளோம்” என்றவரிடம்
கே.எஸ்.அழகிரி ரயில் மறியல் போராட்டத்தை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “கும்பகோணத்திற்கு ஒரு திருமணத்திற்காக சென்றுவிட்டு சென்னை வருவதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது தான் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தி வந்தது. உடனடியாக அந்த இடத்தில் வந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டேன். ரயிலை நிறுத்த வேண்டும் என்று கும்பகோணத்தில் இருந்து ஐந்நூறு பேரை அழைத்து வந்தால் வந்த ரயிலும் சென்றுவிடும். எதிர்மறை மனம் படைத்தவர்கள், நோயாளிகள் தான் என்னுடைய ரயில் மறியல் போராட்டத்தை விமர்சித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
செல்வம்
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மாணவன்: சடலமாக மீட்பு!
காங்கிரஸ் போராட்டம்: டெல்லியில் அனுமதி மறுப்பு!