அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி குறித்து கொடநாடு விவகாரத்தில் அவதூறாக அமைச்சர் பேச சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.
செப்டம்பர் முதல் வாரத்தில் சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசிய பேச்சு இந்தியா முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி, “மக்கள் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்ப சனாதனம் பற்றி உதயநிதி பேசுகிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து உதயநிதி செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,
“ சனாதனத்திற்கான அர்த்தத்தை வீட்டில் உள்ள புத்தக அலமாரியில் இருக்கும் புத்தகங்களில் தேடிக் கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே…
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டுதாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிந்துகொண்டிருக்க முடியாது என்றும், அந்த ஆடே காணாமல் போகும் போது உங்கள் நிலைமை என்னாகும் என்பதை யோசித்துப் பாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் செப்டம்பர் 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்,
“உதயநிதி என்னைப் பற்றி தொடர்ந்து அவதூறாக பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று வழக்குத் தொடுத்தார். மேலும் தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக உதயநிதி தனக்கு 1.10கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று(செப்டம்பர் 21) சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜரானார். உதயநிதி தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் விஜயநாராயணன் வாதாடுகையில், “அமைச்சர் உதயநிதி தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசி வருகிறார். 5ஆண்டுகளாக நடக்கும் கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி தொடர் அவதூறு செய்து வருகிறார். சனாதன ஒழிப்பு மாநாட்டிலும் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பேசினார். எடப்பாடி பற்றி உதயநிதி தனது சமூக தள பக்கத்தில் செய்த அவதூறு பிரச்சாரத்தை 6 லட்சம் பேர் பார்த்துள்ளனர். எனவே தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பிரச்சாரம் செய்திட உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமியின் நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்படும்” என்று வாதிட்டார்.
உதயநிதி தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாத நிலையில், “சமூக தளங்களில் வந்த செய்தி , முரசொலி பத்திரிக்கையில் வந்த செய்தியை, ஆதாரங்களை பார்க்கும்போது உதயநிதி பேசியது நிரூபணமாகிறது. எனவே கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பற்றி இரண்டு வாரங்களுக்கு பேச அமைச்சர் உதயநிதிக்கு இடைக் காலத் தடை விதிக்கிறேன். இரண்டு வாரங்களுக்குள் அமைச்சர் உதயநிதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
–வேந்தன்