கொடநாடு வழக்கை விரைந்து விசாரிக்க கோரி ஓபிஎஸ் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கலந்துகொள்ள உள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த ஜூலை 11ஆம் தேதி அறிவித்திருந்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் டிடிவி தினகரனும் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஜூலை 24) அமமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப் போக்கோடு செயல்படும் தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் 01.08.2023 அன்று நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அமமுக பங்கெடுக்கிறது.
தேனியில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொள்கிறார்.
ஜெயலலிதா மிகவும் நேசித்த இடமான கொடநாட்டில், அவரது மறைவிற்குப் பின் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஆட்சிக்கு வந்த 90 நாட்களுக்குள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெற்று தருவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், இவ்வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத வகையில் மெத்தனப் போக்கோடு தூங்கி வழியும் தி.மு.க அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் 01.08.2023 அன்று 10:30 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
’கலவரத்தில் மாநில அரசும் ஈடுபட்டது’: மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ புகாரால் பரபரப்பு!
டிஜிட்டல் திண்ணை: மதுரை அதிமுக மாநாட்டில் மோடி- மாஸ்டர் பிளான் போடும் எடப்பாடி