kmdk eswaran marina death

மெரினா உயிரிழப்பு: விமானப் படை, போலீஸ் இடையே கம்யூனிகேஷன் இல்லை… ஈஸ்வரன் குற்றச்சாட்டு!

அரசியல்

இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அதிமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சனம் செய்துவருகிற நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, கொமதேக தமிழக அரசை விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” இந்திய விமானத்துறை சார்பாக விமான சாகச நிகழ்ச்சிகள் சென்னை மெரினா கடற்கரையில் நேற்றைய தினம் மக்கள் வியக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

விமான படையினுடைய தற்கால திறமையான தொழில்நுட்பங்களை விமான படை வீரர்கள் வானத்தில் காட்டி ஆச்சரியப்படுத்தினார்கள். அதை பார்க்கும் பொழுது எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தோம்.

ஆனால், மாலையில் 5 பேர் உயிரிழந்திருக்கிறார்கள், 93 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி மொத்த தமிழர்களையும் வேதனை பட வைத்திருக்கிறது. இதைவிட அதிகமான கூட்டங்கள் தமிழக காவல்துறை மிக திறமையாக கையாண்டு இருப்பதை நாம் அறிவோம்.

ஆனால், நேற்றைய நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் விமானப்படை அதிகாரிகளும், தமிழக காவல்துறையும் இணைந்து செயல்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. விமானப்படை அதிகாரிகள் என்ன கேட்டார்களோ அதை செய்து கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

விமானப்படை அதிகாரிகள் சாகச நிகழ்ச்சிகளை மட்டும் அவர்கள் பொறுப்பில் வைத்துக்கொண்டு தரையில் கூடுகிற பார்வையாளர்களுடைய பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை தமிழக காவல்துறையினரிடம் முழுமையாக விட்டிருக்க வேண்டும்.

ஒன்றிய அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்ற விமானப்படை அதிகாரிகள் தமிழக ஆளுநரிடம் அதிகப்படியாக தொடர்பு கொண்டு அவர்களுடைய அறிவுரைகளை கேட்டிருப்பார்களோ என்ற ஐயம் எழுகிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய விரிவான தகவல்கள் தமிழக அரசு அதிகாரிகளிடம் இல்லாமல் இருந்ததை உணர முடிகிறது.

இப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியின் முடிவு உயிரிழப்பிலே முடிந்திருப்பது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாடுகளை தமிழக அரசு அதிகாரிகள் செய்தார்களா அல்லது ஆளுநர் ஆலோசனைப்படி விமானப்படை அதிகாரிகள் செய்தார்களா என்பதை தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

அந்த தெளிவில்லாமல் விமான படை அதிகாரிகளுக்கும், தமிழக அரசு அதிகாரிகளுக்கும் இடையேயான தகவல் குறைபாடுகளே இந்த விபத்திற்கு காரணமாக இருந்திருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

குடும்ப உறுப்பினர்களை இழந்திருக்கின்ற குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென்று இறைவனை பிரார்த்திக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

குழந்தைகளுக்காக தயாரிப்பாளர்களை நச்சரிக்கும் நயன்தாரா …விசித்திர குற்றச்சாட்டு என்ன?

விமான நிகழ்ச்சியில் உயிரிழப்பு… ஐந்து லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்

“சமாளிக்க முடியாத கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்”: கனிமொழி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Comments are closed.