திமுக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அரசியல்

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஆகஸ்ட் 23) விசாரணைக்கு வருகிறது.

கடந்த 2006-11 காலகட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை மீது 2012-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அரசியல் காரணங்களுக்காக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் இதனால் வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரியும் தங்கம் தென்னரசு, அவரது மனைவி தரப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கிலிருந்து 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டனர்

அதேபோல 2006-11 காலகட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2012-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்ட மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் உரிய வருவாய் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூர்த்தி ஆகியோரை கடந்த ஜூலை 20-ஆம் தேதி வழக்கிலிருந்து விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.பி, எல்.எல்.ஏ-க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது

முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். வழக்கின் விசாரணையின் போது அமைச்சருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நடைபெற்ற விசாரணை தாம் பார்த்ததிலேயே மிகவும் மோசமானது என்று நீதிபதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செஸ் இறுதிப் போட்டி: வரலாறு படைப்பாரா பிரக்ஞானந்தா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0