நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காடல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழா இன்று (டிசம்பர் 2) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி , “பட்டம் பெறும் மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் சிறப்பு வாய்ந்தவர் என்பதனை உணர வேண்டும்.
தற்பொழுது இளைஞர்கள் மற்றும் பெண்கள் சட்ட தொழிலுக்கு வருகிறார்கள். உங்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது. நீங்கள் உங்கள் துறையில் சிறப்பாக செயல்படுவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சட்டத்தொழிலில் உள்ளவர்கள் தங்களது செயலை எவ்வாறு திறம்படச் செய்கிறார்கள் என்பதை பொறுத்து தான் மக்கள் நீதித்துறையை நம்புவார்கள். நீங்கள் அதனை செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த சமூகத்தை வழிநடத்தக்கூடியவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.” என்றார்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசும்போது, “நாடு முழுவதும் நீதிமன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு ஒன்பதாயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நான் விரைவில் சென்னை உய ர்நீதிமன்ற நீதிபதியிடம் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களின் கட்டமைப்பு வசதிகள் குறித்து பேச உள்ளேன். தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஸ்மார்ட் ரூம், வீடியோ கான்பரன்சிங் ரூம், அமைத்து தரப்படும்.
இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியாக உள்ளது. இதனால் பொதுமக்கள் நீதியை பெறுவதற்கு அதிக ஆண்டுகள் ஆகிறது. பொதுமக்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைக்க வேண்டும். நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காடல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக நீதிமன்றங்களில் தமிழில் வழக்காடல் நடைபெறுகிறது என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்வோம். இந்திய அரசியலமைப்பில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ் செம்மொழியாக உள்ளது. நீதிமன்றங்களில் பொது மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும். பிராந்திய மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியை பயன்படுத்துவதை உறுதி செய்ய முடிவு செய்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
விஜய் ஹசாரே கோப்பை: அசத்திய ருதுராஜ் கெய்க்வாட்
டான்செட்(TANCET-2023) தேர்வுகள்: அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!