”காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே ஒரு நீண்டபந்தம் உண்டு” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் காசிக்கும் (வாரணாசி), தமிழகத்துக்கும் இடையே நீண்டகால பாரம்பரிய, கலாசார தொடர்பு உள்ளது.
இதை புதுப்பிக்கும் நோக்கில் வாரணாசியில் ஒரு மாத காலத்துக்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதன் தொடக்க விழா, இன்று (நவம்பர் 19) வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பாரம்பரிய வேட்டி சட்டை அணிந்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இசைஞானி இளையராஜா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய பிரதமர் மோடி, “நம்முடைய இந்திய திருநாட்டில், சங்கம திருவிழாக்கள், சங்கமங்கள், எப்போதுமே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
அவை, நதிகளின் சங்கமமாக இருக்கட்டும், கொள்கைகள் மற்றும் எண்ணங்களின் சங்கமமாக இருக்கட்டும்.
ஞானம், விஞ்ஞானம் போன்றவற்றின் சங்கமமாக இருக்கட்டும். சமூகம், கலாச்சாரம் இவற்றின் சங்கமமாக இருக்கட்டும். சங்கமம் ஒவ்வொன்றையும் நாம் ஒரு விழாவாக கொண்டாடி வருகிறோம்.
இந்த நாடு பல வேற்றுமைகள், சிறப்புகளைக் கொண்டது. அதைக் கொண்டாடவே, இந்த சங்கமத் திருவிழா.
இந்த விழா தனித்துவம் மற்றும் சிறப்பைக் கொண்டிருக்கிறது. காசி, தமிழ்நாடு என இரண்டுமே தன்னுடைய கலாச்சாரத்தில் சிறந்து விளங்குகிறது.
காசியும் தமிழ்நாடும் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளில் சிறந்து விளங்குகின்றன. காசியின் பாபா விஸ்வநாத்தும் ராமேஸ்வரத்தின் ராமேஸ்வரரும் பெருமை சேர்க்கிறார்கள்.
காசி, தமிழ்நாடு இரண்டும் சிவமயமானது. சக்தி மயமானது. காசியும் தமிழகமும் திருக்கோயில்களுக்கு பிரபலமானது.
தமிழகத்திலே தென்காசி என்ற ஊர் பிரபலமானது. காசியும், காஞ்சியும் ஏழு முக்கியமான நகரங்களில் ஒன்றானவை.
காசியும் தமிழகமும் பல யுகபுருஷர்களின் ஜென்ம பூமி. காசியிலேயே துளசிதாசர் பிறந்தார் என்றால், தமிழகத்திலே வள்ளுவர் பிறந்து வளப்படுத்தியிருக்கிறார். உங்களுடைய வாழ்க்கையில் பல தத்துவங்களை இந்த காசியும் தமிழகமும் அளிக்கவல்லது.
தமிழகத்தின் திருமண வைபவங்களில் காசி யாத்திரை என்ற நிகழ்வு ஒன்று உண்டு. தன்னுடைய வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் முன்னர், திருமணத்தின் மணமகன், காசி யாத்திரை செல்வதாக அங்கே ஒரு வழக்கம் உண்டு. இவ்வாறு காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே ஒரு நீண்டபந்தம் நெடுங்காலமாக இருந்து வருகிறது.
பழமையான விஷயம் ஒன்று உள்ளது. அது தமிழ் மொழி. நாம் தமிழ்மொழியின் பழம்பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
இந்தியாவிலே இப்படிப்பட்ட ஒரு பழமையான மொழி இருக்கிறது என்பதைக் கேட்டு உலக மக்கள் மிகவும் ஆச்சர்யமடைகிறார்கள். அந்த மொழியை நாம் கெளரவம் தந்து வளர்க்க வேண்டும்; பாராட்ட வேண்டும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
காசி தமிழ்ச் சங்கமம்: மோடியை புகழ்ந்த இளையராஜா
ராஜிவ் கொலையாளிகளைப்போல் விடுதலை செய்யக்கோரி ஷ்ரத்தானந்தா மனு!