கர்நாடக தேர்தல்: பாஜகவைத் திருப்பும்  எடப்பாடி- பன்னீர்

Published On:

| By Aara

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அதே நேரம் 2026 வரை கட்சிக்கு தானே ஒருங்கிணைப்பாளர் என்று வாதாடி வரும் ஓ. பன்னீர்செல்வம் நேற்று ஏப்ரல் 3 ஆம் தேதி இரவு கர்நாடக அதிமுகவுக்கான சுமார் 60 பேர் கொண்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே 10 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்…. நேற்று மாலை எடப்பாடி பழனிசாமியின் செயற்குழு அறிவிப்பு,

பன்னீர்செல்வத்தின் நிர்வாகிகள் நியமனம அறிவிப்பு ஆகியவை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான அரசியல் உறவு… தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அடுத்தடுத்த பேட்டிகளால் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

அதேநேரம் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பெங்களூரு, மைசூரு, கோலார் தங்க வயல் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களின் ஓட்டு அதிகமாக இருப்பதை அடிப்படையாக வைத்து அதிமுகவுடன் சுமுக உறவு பாராட்ட விரும்புகிறது பாஜக தேசிய தலைமை.

இந்த அடிப்படையில்தான் டெல்லியில் நடந்த நிகழ்வில், ‘அதிமுகவுடன் கூட்டணியில்தான் இருக்கிறோம்’ என்று கோடிட்டுக் காட்டினார் அமித் ஷா. 

எதிர்வரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள தமிழர்களின் குறிப்பாக அதிமுகவினரின் வாக்குகளை குறி வைத்திருக்கிறது பாஜக.

Edappadi Panneer will attract BJP attention

இந்த நிலையில்தான் வரும் 7 ஆம் தேதி செயற்குழு கூட்டத்தை கூட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அந்தக் கூட்டத்தில் தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள்,  பிற மாநில கழக செயலாளர்கள்,  நாடாளுமன்ற -சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற முடிவு கூட்டத்தில் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

மேலும் அன்று நடைபெற இருந்த மாசெக்கள் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றும் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்தான் பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளாக சுமார் 60 பேர் கொண்ட பட்டியலை நேற்று ஏப்ரல் 3ஆம் தேதி வெளியிட்டிருக்கிறார். 

Edappadi Panneer will attract BJP attention

எடப்பாடி, பன்னீர் ஆகிய இருவரின் அறிவிப்பும் கிட்டத்தட்ட சில நிமிட இடைவேளையில் வெளியாகியிருக்கிறது.

ஒருவேளை ஈரோடு கிழக்கில் கற்றுக் கொண்ட பாடத்தால் கர்நாடக சட்டமன்றத்தில் தேர்தலில் போட்டி போட ஒருங்கிணைப்பாளர் என்ற ரீதியில் பன்னீர்செல்வம் முடிவு செய்து இருக்கிறாரா அல்லது பாஜகவின் பார்வையை தன் மீது திருப்புவதற்கான ஏற்பாடா என்ற விவாதங்கள் அதிமுகவுக்கு உள்ளே எழுந்துள்ளன.

எடப்பாடியை பன்னீர் விடமாட்டார் போலிருக்கிறது….

வேந்தன் 

’மாணவிகளை வீட்டுக்கு வரச் சொல்லி…’  -கைதான கலாஷேத்ரா ஹரிபத்மன் வாக்குமூலம்! 

ஐ.பி.எல்: வரலாற்று சாதனை படைத்த தோனி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share