அக்டோபர் 9ஆம் தேதி சென்னையில் நடந்த திமுக பொதுக்குழுவில் மகளிரணிச் செயலாளரான கனிமொழி எம்.பிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று நவம்பர் 23ஆம் தேதி வெளியான திமுகவின் வேதப் புத்தகமான முரசொலி ஏட்டில்… கனிமொழி பற்றிய செய்தியில் அவரது துணைப் பொதுச் செயலாளர் என்ற பதவி இடம் பெறாமல், ’கழக மகளிர் அணி செயலாளரும் மக்களவை கழக துணை தலைவருமான’ என்றே இடம்பெற்றுள்ளது.
தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழி நேற்று முன்தினம் நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து தூத்துக்குடி மாவட்டத்தில், மக்களவைத் தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய ரயில்வே திட்டங்களைப் பற்றிய விரிவான மனுவை அளித்தார்.
அது தொடர்பான செய்தி திமுகவின் அதிகாரபூர்வமான நாளேடான முரசொலியில் இன்று (நவம்பர் 23) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியில் தான், “தூத்துக்குடி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 17 ரயில்வே திட்டங்களை உடனே நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கழக மகளிர் அணி செயலாளரும் மக்களவை கழகத் துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மனு அளித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்த கனிமொழி ஆதரவாளர்கள், “கடந்த அக்டோபர் மாதம் நடந்த பொதுக்குழுவில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டு விட்ட நிலையில்… முரசொலியில் இன்று வெளியான செய்தியில் அவரது துணைப் பொதுச் செயலாளர் என்ற பதவி பயன்படுத்தப்படாமல் மகளிரணிச் செயலாளர் என்ற கட்சிப் பதவியை பயன்படுத்தியிருப்பது ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது” என்று தெரிவிக்கிறார்கள்.
முரசொலியின் ஆசிரியர் உதயநிதி ஸ்டாலின் என்பது குறிப்பிடத் தக்கது.
வேந்தன்