கள்ளக்குறிச்சி கலவரம் : எடப்பாடிக்கு எ.வ.வேலு கண்டனம்!

Published On:

| By Kavi

மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில் திமுக அரசு துரிதமாகச் செயல்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியமூரில் செயல்பட்டு வரும் சக்தி என்ற தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி கடந்த 13ஆம் தேதி உயிரிந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு நேற்று மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டம் கலவரமானது.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, கடந்த மூன்று நாட்களாகப் பெற்றோர்கள் போராடியும் எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. உளவுத் துறை துரிதமாகச் செயல்பட்டிருந்தால் கலவரத்தைத் தடுத்திருக்கலாம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு, உட்கட்சி மோதலை திசைதிருப்பவே இப்படி பேட்டி அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவி மரணத்தைப் பொறுத்தமட்டில் அச்செய்தி வெளிவந்தவுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும், காவல்துறைக் கண்காணிப்பாளரும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி போலீஸ் விசாரணை முடுக்கிவிடப்பட்டது. மாணவி மரணம் குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்றுவந்த வேளையில் பெற்றோர் தரப்பில் சி.பி.சி.ஐ.டி விசாரணை கோரி வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு விசாரணை நாளைய (ஜூலை 18 – இன்று) தினம் நடைபெறவிருக்கிறது.
பிள்ளையை இழந்த பெற்றோரின் குடும்பத்தைத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி மாணவியின் மரணம் குறித்த விசாரணை பாரபட்சமின்றி நடக்கும் என்று உறுதியும் அளித்துள்ளதை ஏனோ தன் கட்சியில் இருக்கும் குழப்பத்தில் மறந்துவிட்டு எந்தப் பதவியில் நாம் இருக்கிறோம் என்பது தெரியாத குழப்பத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் மீது வசைபாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்” என்று விமர்சித்துள்ளார்.

மேலும் அவர், “அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்த வேண்டும் என்று எங்கிருந்தோ தூண்டிவிடப்பட்டு வந்த சில விஷமிகள் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளார்கள். இதை அறிந்தவுடன் மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் “மக்கள் அமைதி காக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டதுடன், டிஜிபியையும், உள்துறைச் செயலாளரையும் கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வன்முறையை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வந்து தற்போது அங்கே அமைதியை நிலை நாட்டியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது காவல்துறை நிர்வாகம் எப்படியிருந்தது என்றால் ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேரை காக்கை குருவிகள் போல் சுட்டுக் கொன்று பல நாட்கள் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க முடியாமல் அரசே தோல்வியடைந்து ஸ்தம்பித்து நின்றது. சாத்தான்குளம் காவல் நிலைய கஸ்டடி மரணத்தில் காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டையே வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட சூழல் உருவாகி தன் கீழ் இருந்த காவல்நிலையத்தின் நிர்வாகத்தையே கோட்டை விட்டு கோட்டையில் அமர்ந்திருந்தார் பழனிசாமி.
அதிமுக ஆட்சியில் குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் நான்காண்டு நிர்வாகத்தில் “டபுள் டிஜிபி” போட்டு காவல்துறையையே சீரழித்தவருக்கு இன்று திமுக ஆட்சியில் தலைநிமிர்ந்து நின்று சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரையும், முதல்வரையும் குறை சொல்ல எந்தத் தார்மீகத் தகுதியும் இல்லை. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்த விசாரணை முடிவில் தவறு யார் மீது இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் வேண்டாம். குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்.

அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் விஷமிகளை அனுப்பி இந்த வன்முறையைத் தூண்டிவிட்டவர்கள் யார் என்பதையும் சேர்த்தே போலீஸ் விசாரித்து வருகிறது. ஆகவே கலவரத்தில் ஈடுபட்டவர்கள், தூண்டிவிட்டவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தக்க தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்பதோடு மாணவி மரணத்தில் நடைபெறும் சிபிசிஐடி விசாரணையின் அடிப்படையில் நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment