வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி கலைஞர் நினைவு நாளில் நடைபெறும் அமைதி பேரணியில் அணி திரள்வோம் என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்
கலைஞரின் ஆறாவது நினைவு நாள், ஆகஸ்ட் 7-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 4) கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “ஒட்டுமொத்தத் தமிழினத்தின் பாதுகாவலராக, நவீனத் தமிழ்நாட்டைத் தட்டித் தட்டிச் செதுக்கிய சிற்பியாக, தமிழைத் திறம்படக் கையாண்ட படைப்பாளராக, செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்த தமிழினப் போராளியாக, 80 ஆண்டுகாலப் பொதுவாழ்வின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு பொழுதையும் தமிழ் – தமிழர் – தமிழ்நாடு மேன்மைக்காக அர்ப்பணித்து அயராது உழைத்த ஓய்வறியாத சூரியனாம் தலைவர் கலைஞர் இப்போதும் நம் இதயத் துடிப்பாக இருக்கிறார்.
ஆகஸ்ட் 2-ஆம் நாளன்று புதுப்பிக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தின் வண்ணமிகு திறப்பு விழாவில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக உங்களில் ஒருவனான நான் பங்கேற்றேன். உங்களைப் போலவே நானும் அந்த மேம்பாலத்தைப் பயன்படுத்துகிற பயனாளிதான். அந்தப் பயன் நமக்கு கிடைக்கச் செய்தவர் கலைஞரன்றோ!
அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் 2010-ஆம் ஆண்டில் தலைநகரத்தின் பசுமை நுரையீரலைப் போன்ற செம்மொழிப் பூங்காவை உருவாக்கினார். மக்களின் வாழ்க்கைத் தேவைக்கானக் கட்டமைப்புகளைக் காலத்திற்கேற்ற சூழலியல் பார்வையுடன் உருவாக்கிய சிந்தனையாளர் கலைஞர்.
கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் கருப்பொருளாக, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அய்யன் திருவள்ளுவரின் குறளை, திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் குரலாக முன்னெடுத்தவரும் கலைஞர்தான்.
மனித சமுதாயத்தில் ஓர் உயிர்கூட பிறப்பின் அடிப்படையில் பேதம் பிரிக்கப்பட்டு, தனது அடிப்படை உரிமைகளைக் காலம்காலமாகப் பறிகொடுத்துக் கொண்டே இருக்கக்கூடாது என்பதே சமூகநீதியின் அடிப்படைக் கொள்கை.
அதனை நடைமுறைப்படுத்தும் வகையில், ஐந்து முறை தனக்கு ஆட்சி செய்யும் வாய்ப்பைத் தமிழ்நாட்டு மக்கள் வழங்கியபோதெல்லாம் சமூகநீதிக் கொள்கையை இடஒதுக்கீட்டின் மூலம் சட்டப்பூர்வமாக நிறைவேற்றியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், அதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள், சிறுபான்மைச் சமுதாயத்தினர் என அனைத்துத் தரப்பினரின் உரிமைகளையும் சமூகநீதிக் கொள்கை வழியாக நிலைநாட்டி, தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அளவினை இன்றுள்ள 69 விழுக்காட்டிற்கு உயர்த்தி வைத்தவரும் அவர்தான்.
பட்டியல் இன மக்களுக்கான இடஒதுக்கீட்டை 18% என உயர்த்தியவரும் கலைஞர்தான், அதில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு உரிய அளவில் ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கியவரும் அவரேதான்.
சிறுபான்மைச் சமுதாயத்தினரான முஸ்லிம்களுக்கு 3.5% தனி இடஒதுக்கீட்டிலும், அருந்ததியர் சமுதாயத்தினருக்கான 3% உள்ஒதுக்கீட்டிலும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை உறுதி செய்யும் வகையில், உரிய தரவுகளுடனும், தெளிவான சட்டப்பார்வையுடனும், சமூகநீதியில் உண்மையான அக்கறையுடனும் கலைஞர் மேற்கொண்ட நடவடிக்கைகள் எத்தகைய தொலைநோக்குப் பார்வை கொண்டவை என்பதை உச்சநீதிமன்றத் தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது.
பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் பெண்களுக்குச் சொத்துரிமை, பெண்களுக்கு இடஒதுக்கீடு, திருநங்கையருக்கான அங்கீகாரம், மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள், பிச்சைக்காரர்கள் – தொழுநோயாளர்களுக்கு மறுவாழ்வு எனத் தமிழ் மண்ணில் வாழும் அத்தனை மனிதர்களுக்குமான உரிமைகளையும் வழங்கி அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் அடித்தளமிட்ட தாயுள்ளம் கொண்ட தலைவரன்றோ!
சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில், இந்தியாவில் வாழும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்குத் தூண்டுகோலாகவும், அதனால் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிகளில் துணை நின்ற தோழராகவும் விளங்கியவர் கலைஞர்.
குடிசை மாற்று வாரியம் தொடங்கி, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக் கட்டணம் வரை இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டங்களைச் செயல்படுத்தியவரும் அவர்தான்.
ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறைகளால் தமிழ்நாட்டிற்குரிய நிதியும் திட்டங்களும் புறக்கணிக்கப்பட்டாலும், நம்மை எந்நாளும் இயக்கும் நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்களிடம் கற்றுக்கொண்ட அரசியல் – நிர்வாகத் திறனால் தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றி நல்லாட்சியை வழங்கி வருகிறது திராவிட மாடல் அரசு.
இந்தநிலையில், நம் நெஞ்சத்தில் நிறைந்து வாழும் கலைஞரின் நினைவினைப் போற்றும் வகையில், ஆகஸ்ட் 7 அன்று சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் திருவுருவச் சிலை அருகிலிருந்து, அவர் நிரந்தர ஓய்வெடுக்கும் கடற்கரை நினைவிடம் வரை கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது.
கடல் அலைகளின் தாலாட்டில் நம் நினைவலைகளாக நெஞ்சில் நிறைந்துள்ள உயிர்நிகர்த் தலைவர் கலைஞரின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம். எதையும் தாங்கும் இதயம் கொண்ட தன் அண்ணன் அருகில் ஓய்வு கொள்ளும் ஓயாத உழைப்பாளியாம் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகு நடைபெறுகிற முதல் அமைதிப் பேரணி இது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் உள்ள கழக அலுவலகங்களில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மலர் தூவி நன்றியினைச் செலுத்துங்கள். கழக உடன்பிறப்புகள் அவரவர் வீடுகளில் தலைவர் கலைஞருக்கு நன்றியை செலுத்துங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய திருச்சி எஸ்.பி!
Olympic 2024: த்ரில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு சென்ற இந்தியா!