5 லட்சம் மரங்கள்: வேலு அறிவிப்பை செயல்படுத்திய ஸ்டாலின்
“மரம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்” என்ற வாசகங்கள் தான் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றால் நம்மை வரவேற்கும்.
இயற்கையின் மீது பேரன்பு கொண்ட கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 இலட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என 2023-2024ஆம் ஆண்டு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அந்த அறிவிப்பின்படி கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்க நாளான நேற்று முதல்வர் ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 5 இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை மரக்கன்று, நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
தமிழகமெங்கும் நெடுஞ்சாலை துறையின் 340 சாலைகளில் நடப்படவுள்ள மகிழம், வேம்பு, புளியன், புங்கன், நாவல், சரக்கொன்றை போன்ற வகையைச் சார்ந்த சுமார் 46,410 மரக்கன்றுகள் 24 மாத காலம் வளர்ச்சிக் கொண்டவையாகும். மேலும், பருவமழைக்கு முன்பாகவே 5 இலட்சம் மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செல்வம்
சட்டப்பேரவைக்குள் குட்கா: ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கு: நாளை ஒத்திவைப்பு!