தமிழ்நாட்டில் மத்திய அமைச்சர்கள் திட்டப்பணிகளை ஆய்வு செய்வது ஆரோக்கியமானது அல்ல என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமியிடம், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களை, மத்திய அமைச்சர்கள் நேரடியாக கள ஆய்வு செய்வது பற்றியும், பயனாளிகளிடம் இது மத்திய அரசின் திட்டம் என்று கூறுவதாகவும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அன்றைய ஆட்சியாளர்கள் இவ்வளவு கீழே இறங்கி வரவில்லை.
அன்றும் மத்திய அரசின் திட்டங்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வந்துகொண்டு தான் இருந்தன.
அப்படி வந்தபோதும் கூட, அந்த மாநில ஆட்சியாளர்கள் தாங்கள் செய்வது போல காட்டிக் கொள்வார்கள். ஆனால் அதைப்பற்றி மத்தியிலே ஆட்சியில் இருப்பவர்கள் கவலை கொள்ள மாட்டார்கள்.
ஆனால் தற்போது பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு பல திட்டங்களை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று சொல்கிறார்கள். அது அவ்வளவு ஆரோக்கியமான செயல் இல்லை என்றே நான் கருதுகிறேன்.
காரணம் நாங்கள் செய்கிறோம், நீங்கள் செய்கிறோம், என்று சொன்னால் மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் ஒரு மாறுபட்ட கருத்து, மாறுபட்ட சிந்தனை,
வருகின்றபோது அரசுத்துறையில் இருக்கின்ற நிர்வாகிகள், அதிகாரிகள் அவர்கள் செயல்படுவதற்குரிய சங்கடங்கள், சூழ்நிலைகள் வந்துவிடும்.
அது ஒரு தேசியக்கட்சி, அந்தக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த முயற்சியை பல்வேறு வழிகளில் செய்யலாம்.
ஆனால் இதை ஒரு துருப்பு சீட்டாக எடுத்துக் கொண்டு இருப்பது எதிர்காலத்தில் அவ்வளவு ஆரோக்கியமாக இருக்காது என்பது எங்களது கருத்து” என்று கூறியுள்ளார்.
கலை.ரா
எடப்பாடியுடன் சி.வி.சண்முகம் சென்ற விவகாரம்: கே.பி.முனுசாமி பதில்!
தூங்காமல் புலம்பிய கொலையாளி : 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பு!