இமாச்சல் பிரதேச மாநிலத்தில், நாளை (அக்டோபர் 5) பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில், செய்தி சேகரிக்க செல்லும் நிருபர்கள் தங்களது நன்னடத்தை சான்றிதழை வழங்க வேண்டும் என்று பிலாஸ்புர் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை இமாச்சல் பிரதேச மாநிலம், பிலாஸ்புர் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
பின்னர், குள்ளு பகுதியில் உள்ள தல்பூர் மைதானத்தில் வைத்து நடைபெறும் தசரா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில், செய்தி சேகரிக்க செல்லும் அனைத்து பத்திரிகை, தொலைக்காட்சி, டிஜிட்டல், அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் நிருபர்கள்,
தங்களது நிறுவன அடையாள அட்டை, நன்னடத்தை சான்றிதழ்களை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இதுகுறித்து பிலாஸ்பூர் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி குல்தீப் குலேசியா கூறும்போது, “செய்தி சேகரிக்க வரும் நிருபர்கள் அடையாள அட்டை மட்டும் வைத்திருந்தால் போதாது.
நன்னடத்தை சான்றிதழையும் வழங்க வேண்டியது கட்டாயம். இது அனைத்து செய்தியாளர்களுக்கும் பொருந்தும். காவல் கண்காணிப்பாளர் மற்றும் குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் படி, நன்னடத்தை சான்றிதழ்கள் கேட்டுகப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
செய்தி சேகரிக்க செல்லும் நிருபர்களிடம் இத்தனை சான்றிதழ்கள் கேட்ட போலீசார், தசரா திருவிழா மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களிடம் எந்த ஒரு சான்றிதழ்களையும் கேட்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இமாச்சல் பிரதேச ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் பங்கஜ் பண்டிட் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி இமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு வருவது இது முதல்முறை அல்ல.
செய்தி சேகரிக்க வரும் செய்தியாளர்களிடம் நன்னடத்தை சான்றிதழ் கேட்பது, அவமானகரமானது மற்றும் ஊடகங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் முயற்சியாகும்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மேலும் ஒருவரின் உடல் மீட்பு!