கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் திமுகவின் தோழமை கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை அழைக்காதது ஏன்? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஆகஸ்ட் 16) கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக அவசர செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்,
“எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவினர் தீவிரமான களப்பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் திமுகவின் தோழமை கட்சிகள் பங்கேற்கவில்லை. திமுக இந்த நிகழ்ச்சியில் பங்குபெறாது என்று கூறிவிட்டு, அரசு சார்பில் கலந்துகொள்வோம் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகிறார்.
ஸ்டாலின் வேறு, திமுக தலைவர் வேறா? திமுக தலைவர் பதவியை வேறு யாருக்காவது கொடுத்திருக்கலாமே? முதல்வர் மற்றும் 8 அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது எம்ஜிஆர் நாணயம் வெளியிட்டோம். ஆனால், நாங்கள் யாரையும் அழைக்கவில்லை.
அதேபோல கலைஞர் நாணய வெளியீட்டு விழாவை நடத்தலாமே? ஏன் தோழமை கட்சியான காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. ஆனால், ராஜ்நாத் சிங்கை அழைத்திருக்கிறீர்கள்.
அதேபோல தமிழக எம்.பி-க்களுக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேநீர் விருந்து அளிக்கிறார். பாஜகவும், திமுகவும் ரகசிய உறவு வைத்திருக்கிறார்கள் என்பதை சிறுபான்மை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். நாணயம் வெளியீட்டு விழாவில் அதிமுக பங்கேற்காது.
ஆகஸ்ட் இறுதியில் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். அந்த சமயத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்தில் மத்திய அரசிடம் திமுக சரணாகதி அடைந்துள்ளது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’தமிழர்களிடம் மன்னிப்பு கேட்பதில் சிக்கல் இருக்கு’ : மத்திய அமைச்சர்
தனுஷ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ராயன் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!