பாலிவுட்டில் ஜெய்பீம் இயக்குநர்!
ஜெய்பீம் பட இயக்குநர் த.ச.ஞானவேல், ‘தோசா கிங்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் கால்பதிக்க இருக்கிறார்.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நடிகர் சூர்யா நடிப்பில் 2021ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி வெளிவந்த படம் ஜெய்பீம். ஓடிடியில் வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் த.ச.ஞானவேல் இயக்கியிருந்தார். அதேநேரத்தில், வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸுக்கு நடிகர் சூர்யாவும், இயக்குநர் த.ச.ஞானவேலும் விளக்கமளித்தனர். தொடர்ந்து காவல் துறையிலும் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநர் ஞானவேல் இந்திய அளவில் பிரபலமானார். சூர்யாவும், ஞானவேலும் அடுத்த படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவிடும் நிலையில், அதற்கு முன்பாக பாலிவுட்டில் கால்பதிக்க இருக்கிறார், இயக்குநர் த.ச.ஞானவேல்.
பிரின்ஸ் சாந்தகுமார் படுகொலை வழக்கில், சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு எதிராக 18 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்திய ஜீவஜோதியின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட இருக்கிறது. இந்தப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ஜங்கிள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்திற்கு ‘தோசா கிங்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
ஜெ.பிரகாஷ்