வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதியில் விஜய் போட்டியிட உள்ளதாக தவெக தருமபுரி மாவட்ட தலைவர் தா.ப. சிவா தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் இன்று (நவம்பர் 17) நடைபெற்றது.
அக்கட்சியின் மாவட்ட தலைவர் தா.ப.சிவா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தருமபுரியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட, பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர், பிறக் கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அவர்களை தா.ப. சிவா தவெக துண்டு அணிவித்து வரவேற்றார்.
தொடர்ந்து கூட்டத்தில் அவர் பேசுகையில், “வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் தருமபுரியில் உள்ள ஐந்து தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என உறுதியாக கூறுகிறேன்.
‘தருமபுரி மண் அதியமான் பிறந்த மண், அவ்வையார் வாழ்ந்த மண். எங்கள் தொகுதியில் நீங்கள் நின்று முதலமைச்சர் ஆக வேண்டும்’ என கோரிக்கை வைத்தோம். அதை ஏற்று தருமபுரியில் தான் போட்டியிடுவதாக தலைவர் உறுதி அளித்துள்ளார். இதனை அறிவிப்பதற்கும் அவர் அனுமதி அளித்தார். இச்செய்தியை இக்கூட்டத்தின் வாயிலாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் நமது தலைவரை வெற்றி பெற செய்ய வேண்டும்” என சிவா தெரிவித்தார்.
இதனை கேட்ட அங்கிருந்த கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆரவாரம் செய்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Carrom WorldCup : மூன்று தங்கம் வென்ற தமிழ்நாட்டு சிறுமி… ஸ்டாலின் பாராட்டு!