ஆர்எஸ்எஸைக் காரணம் காட்டி அரசியல் கட்சிகள் நடத்தும் சமூகநல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பது சரியா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தது போல, அக்டோபர் 2ஆம் தேதி விசிக – இடதுசாரி கட்சிகள் இணைந்து நடத்தவிருந்த சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி பேரணிக்கும் காவல்துறை அனுமதி மறுத்தது.
இதனால் அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாடுவோம் என்று கூறிய விசிக தலைவர் திருமாவளவன் அரசு மீது அதிருப்தியும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 30) திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 02 காந்தியடிகளின் பிறந்த நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்துக்கு அரசு தடை விதித்துள்ளது.
அவ்வமைப்பு அரசியல் கட்சி அல்ல, மாறாக மதவாத இயக்கம் என அறியப்பட்ட நிலையில் அரசுக்கு எழும் அச்சத்தில் நியாயம் உள்ளது.
ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இடது சாரி கட்சிகளும் இணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, அதே நாளில் நடக்கவிருந்த மனித சங்கிலி அறப்போராட்டத்திற்கு தடை விதித்திருப்பது எவ்வகையில் நியாயம் என்னும் கேள்வி எழுகிறது.
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த நிலையில் அதற்கு பின்வருமாறு காரணங்களை கூறுகிறது காவல்துறை.
இந்திய ஒன்றிய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.
மாநிலத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மாநிலத்தின் சட்ட ஒழுங்கை காக்க, கண்காணிக்க காவல்துறையினர் முழு வீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்க இயலாது எனக் குறிப்பிட்டு இருந்தது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு கூறி இருக்கும் காரணம் ஏற்கத்தக்கதாக உள்ளது.
ஏனெனில் அவை இரண்டும் தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அல்ல.
ஆனால் சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளும் விசிகவும் தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளாகும்.
இந்த மூன்று அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து அறிவித்திருந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்திற்கு தோழமைக் கட்சிகளான மதிமுக, மமக, தவாக, நாதக, எஸ்டிபிஐ, சிபிஐ(எம்எல்வி), தபுக, என பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் திக, திவிக, தபெதிக, போன்ற சமூக நீதி இயக்கங்களும் ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.
அதாவது இந்த போராட்டம் முற்றிலும் அரசியல் கட்சிகள் இணைந்து நடத்துவதாகும்.
எனவே, இதனை மதம் சார்ந்த அமைப்புகளின் நடவடிக்கைகளோடு ஒப்பிடுவதும், அனுமதி மறுப்பதும் ஏற்புடையதாக இல்லை.
மதவெறி பாசிச ஆர்எஸ்எஸ் அமைப்புடன் ஜனநாயக வழியில் மக்களுக்கு பணியாற்றும் அரசியல் கட்சிகளை ஒப்பீடு செய்வதே வேதனைக்குரியதாகும்.
எனவே காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 02 ஆம் நாளன்று நடக்கவுள்ள எமது சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கலை.ரா