ஜிஎஸ்டி கவுன்சிலில் தமிழகத்துக்கான கல்வி திட்ட நிதி, ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கான நிவாரண நிதி ஆகியவற்றை விடுவிக்க மத்திய அரசிடம் தமிழக நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று (டிசம்பர் 21) நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டார்.
அப்போது தமிழகத்தின் கோரிக்கைகளை அவர் முன்வைத்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை மெட்ரோ இரயில் 2-ம் கட்ட பணிகளுக்காகத் தமிழ்நாடு அரசு ரூ.26,490 கோடி ரூபாய் செலவிட்டுள்ள காரணத்தால், மாநிலத்தில் இதர வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள ஏதுவாக, நடப்பாண்டில் ரூ. 10,000 கோடி மற்றும் அடுத்த ஆண்டு ரூ.16,000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஆசிரியர்களுக்கான ஊதியம் – கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பள்ளிச் செயல்பாடுகளை முடக்கும் வகையில், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் ரூ.2,152 கோடி நிதியை விடுவிக்காமல் நிபந்தனைகளை ஏற்க வற்புறுத்தி வரும் ஒன்றிய அரசு, 44 இலட்சம் மாணவர்கள் – 2.2 இலட்சம் ஆசிரியர்கள் – 21,276 பணியாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
ஒன்றிய அரசின் 2025 நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிய ரயில் திட்டங்களுக்கான அனுமதி மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அதிகரிக்க வேண்டும்.
வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவற்றின் தீவிரத்தன்மை காரணமாக தமிழ்நாடு தொடர் பேரிடர் சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், மக்களின் உயிர் – வாழ்வாதாரம் – உட்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் உண்டாகி வருகிறது. நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதி போதுமானதாக இல்லை. குறிப்பாக, ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.6.675 கோடியை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
தி.மு.க. எம்.பி.க்கள் என்ன பேசுகிறார்கள்? கேட்டவர்களுக்கு பட்டியல் போட்டு ஸ்டாலின் பதிலடி!
‘துக்கவீடு போல இருக்க கூடாது; கல்யாண வீடு போல களை கட்ட வேண்டும்’ – இறப்பை கொண்டாடிய பின்னணி