”யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு விளம்பரத்தில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை புறக்கணித்துள்ளது அரசியல் சாசனத்தை மீறும் செயல் இல்லையா?” என்று பிரதமர் மோடிக்கு திமுக எம்.பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 18) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சேர்ப்பு செயல்முறையில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற அரசியல் சாசன உத்தரவை யு.பி.எஸ்.சி., எப்படி புறக்கணித்துள்ளது என்பதற்கு யு.பி.எஸ்.சி., இன்று வெளியிட்டுள்ள பின்வரும் விளம்பரம் ஒரு சிறந்த உதாரணம்.
பதவிகளுக்கான எந்த இட ஒதுக்கீடும் வழங்காமல், 10 இணை செயலாளர் பதவிகள், 35 இயக்குனர் / துணை செயலாளர் பதவிகள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான அறிவிப்புகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால், மத்திய அரசு ஊழியர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற விளம்பரங்கள் வெளியிடும்போது, மொத்தமுள்ள 45 இணைச் செயலாளர் மற்றும் இயக்குநர் / துணை செயலாளர் பதவிகளில் குறைந்தது 22-23 விண்ணப்பதாரர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எஸ்சி / எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இது அரசியல் சாசனத்தை மீறும் செயல் இல்லையா? பிரதமர் அவர்களே, நீங்கள் இந்த சட்டவிரோதமான, இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆட்சேர்ப்பு செயல்முறையை தொடரப் போகிறீர்களா அல்லது அரசியல் சட்ட இடஒதுக்கீட்டு முறையை செயல்படுத்தி புதிய நியமனத்திற்கு அழைப்பு விடுக்கப் போகிறீர்களா?” என திமுக எம்.பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார், பைக் ஷோரும் டீலர்களின் வேட்டை… ஆக்ஷனில் இறங்கிய அமைச்சர் சிவசங்கர்
”வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் கலைஞர்”: பிரதமர் மோடி புகழாரம்!
ஆவணி மாத நட்சத்திர பலன் – மூலம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)