பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாரின் டெல்லி பயணம் குறித்து தேர்தல் உத்தி நிபுணரான பிரசாந்த் கிஷோர் சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அண்மையில் பிகாரில் பாஜக கூட்டணியை முறித்துவிட்டு, ஆர்ஜேடியுடன் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைத்தார் நிதிஷ்குமார்.
இதன் பிறகு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி டெல்லி சென்ற நிதிஷ் குமார் ராகுல் காந்தி, சரத் பவார், சீதாராம் யெச்சூரி, ராஜா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்தார்.
விரைவில் சோனியா காந்தியை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் நிதிஷ்.
இந்த நிலையில் தேர்தல் உத்தி நிபுணரான பிரசாந்த் கிஷோர் இந்தியா டுடே இதழுக்கு பேசியபோது, “தலைவர்களைச் சந்திப்பதும், தலைவர்களுடன் டீ குடிப்பதும் பொதுமக்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
அது தேர்தலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. தேர்தலில் போட்டியிடும் உங்கள் திறன், உங்கள் நம்பகத்தன்மை அல்லது புதிய கூட்டணியை உருவாக்குதல் ஆகியவற்றில் இந்த சந்திப்பு என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் பிரசாந்த் கிஷோர்.
மேலும் அவர், “நிதிஷ்குமார் பாஜகவில் இருந்து விலகி மகா கூட்டணியில் இணைந்தது என்பது பிகார் மாநிலம் சார்ந்த சம்பவம்.
இது மற்ற மாநிலங்களில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. நிதிஷ் குமாரின் டெல்லி பயணத்துக்கு தேவையில்லாத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
தேசிய அரசியலில் அதன் தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும்” என்று கூறியுள்ளார் பிரசாந்த் கிஷோர்.
ஏற்கனவே நிதிஷின் ஐக்கிய ஜனதா தளத்தில் துணைத் தலைவராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.
–வேந்தன்
சரத்பவாரை சந்தித்த நிதிஷ்குமார்