”விஜய் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை” : திருமாவளவன்

Published On:

| By christopher

"I disagree with Vijay's opinion": Thirumavalavan

இன்றைக்கு பொது நீரோட்டத்தில் அம்பேத்கர் வெகுவாக பேசப்படுகிறார். அந்த வரிசையில் விஜய்யும் இணைந்திருப்பது வரவேற்புக்குரியது என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

சென்னையில் இன்று (டிசம்பர் 6) நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், “அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து விசிக தலைவர் திருமாவளவனுக்கு எவ்வளவு நெருக்கடி இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. அவரின் மனசு முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும்” என்று பேசியிருந்தார்.

இதுதொடர்பாக திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அந்த அளவுக்கு நான் பலவீனமாக இல்லை!

அதற்கு அவர், ”தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அம்பேத்கர் நினைவு நாளில், அம்பேத்கரின் நூலை வெளியிட்டிருப்பதும், அவரைப் பற்றி பேசியிருப்பதும் பெருமை அளிக்கிறது. இன்றைக்கு பொது நீரோட்டத்தில் அம்பேத்கர் வெகுவாக பேசப்படுகிறார். அந்த வரிசையில் விஜய்யும் இணைந்திருப்பது வரவேற்புக்குரியது.

அந்த நிகழ்வில் நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கொடுத்த அழுத்தம் தான் காரணம் என அவர் பதிவு செய்திருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுப்படுத்தியிருக்கிறேன்.

அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கும் அளவுக்கு நானோ அல்லது விசிகவோ பலவீனமாக இல்லை என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

விஜய் காரணமில்லை!

இந்த நிகழ்வின் நான் பங்கேற்காமல் போனதற்கு விஜய் காரணமில்லை. அவருக்கும் எங்களுக்கும் எந்த விதமான சிக்கலும் இல்லை.

ஆனால், விஜய் – திருமா இருவரும் ஒரே மேடையில் பங்கேற்க போகிறோம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே, அதற்கு அரசியல் சாயம் பூச சிலர் முயற்சித்தனர். அதை ஆராய வேண்டிய தேவை உள்ளது. அவர்கள் எந்த பின்னணியில் இயங்குகிறார்கள், எப்படி அந்த செய்தியை வெளியிட்டார்கள் என்பது முக்கியமானது.

ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் தேர்தல் அரசியல் களத்தில் நாங்கள் நிற்கிறோம். யார் என்ன பின்னணியில் இயங்குகிறார்கள் என்பதை ஓரளவுக்கு எங்களாலும் யூகிக்க முடியும்.

அந்த வகையில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை அரசியலாக்கிவிடுவார்கள். அப்படி அரசியலாக்குவதை நான் விரும்பவில்லை.

தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணியை குறிவைத்து காய் நகர்த்தும் அரசியல் நடக்கிறது. அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தர நான் விரும்பவில்லை.

இது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. நல்லெண்ணத்தின் அடிப்படையில் எடுத்த முடிவு. விசிக அங்கம் வகிக்கக்கூடிய கூட்டணி சிதையாமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தொலைநோக்கு பார்வையுடன் எடுத்த முடிவு. இதில் எந்த பிரஷரும் இல்லை. திமுக எந்த வகையிலும் தலையிடவில்லை” என்றார்.

ஆதவ் அர்ஜூனாவிடம் விளக்கம் கேட்கப்படும்!

தமிழகத்தில் மன்னராட்சிக்கு இனி இடமில்லை என்று ஆதவ் அர்ஜூனா பேசியது திருமா பேசுகையில், “வாய்ஸ் ஆஃப் காமன்’ என்ற நிறுவனத்தின் அடிப்படையில் தான் ஆதவ் அர்ஜுனா புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றார். அவர் கூறியிருக்கும் கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு. கட்சி பொறுப்பல்ல. அது அவரின் தனிப்பட்ட கருத்து சுதந்திரம். அவருக்கு நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்ற வருத்தம் உள்ளது” என்றார்.

மேலும் அவர், “திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு அவரிடம் விளக்கம் கேட்கப்படும். பின்னர் அவர் மீது நடவடிக்கை குறித்து கட்சி உயர்மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்படும்” என்று திருமாவளவன் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”திருமாவளவன் மனசு நம்மோட தான் இருக்கு” : விஜய்யின் ’நச்’ பினிஷிங் டச்!

’2026 தேர்தலில் மன்னராட்சிக்கு இடமில்லை’ : ஆதவ் அர்ஜூனா

திமுக வெற்றி பெற முக்கிய பங்காற்றிய ஆதவ் அர்ஜூனா : நூல் வெளியீட்டு விழாவில் வெளியான வீடியோ!

அம்பேத்கருடன் செல்பி… அரங்கம் அதிர எண்ட்ரி கொடுத்த விஜய்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share