மாமன்னன் படம் குறித்து எடப்பாடி பதில்!

Published On:

| By christopher

நான் மாமன்னன் படம் பார்க்கவில்லை. பார்க்க வேண்டிய அவசியமும் எனக்கு ஏற்படவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் கடந்த ஜூன் 29 அன்று வெளியானது.

இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் திரையரங்கில் வெளியானது முதல் பொதுவெளியிலும், அரசியல் வட்டாரத்திலும் மிகப்பெரும் விவாதங்களை ஏற்படுத்தி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகிறது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் 35 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

‘மாமன்னன்’ படத்தின் வெற்றியை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இயக்குநர் மாரிசெல்வராஜ்க்கு கார் ஒன்றை பரிசாக வழங்கி தயாரிப்பு நிறுவனம் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது.

இந்நிலையில், அ.தி.மு.க. பொதுசெயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை நேற்று (ஜூலை 2) சந்தித்த போது அவரிடம் ‘மாமன்னன்’ திரைப்படம் குறித்து கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த எடப்பாடி, “நான் மாமன்னன் படம் பார்க்கவில்லை. பார்க்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. பார்க்காததை குறித்து நான் எப்படி பேச முடியும்.

எங்களுடைய இயக்கம் வேறு, அவர்களுடைய இயக்கம் வேறு. எங்கள் இயக்கத்தில் யாராவது நடித்திருந்தால், அதில் ஏதாவது திரைக்கு வந்திருந்தால் அதில் இருந்த கருத்துகளை கேட்டால், அதற்கான பதிலை நான் சொல்ல தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

மாமன்னன் படத்தில் வடிவேலு கதாபாத்திரம் முன்னாள் சபாநாயகர் தனபாலை நினைவூட்டுவதாக படம் பற்றிய விமர்சனங்களில் குறிப்பிடப்பட்டு வருவதுடன் கதை நிகழும் களம் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இராமானுஜம்

விம்பிள்டன்: பெடரர் சாதனையை சமன் செய்வாரா ஜோகோவிச்?

இந்த மாத இறுதியில்தான் என்ஜினீயரிங் கவுன்சிலிங்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share